Wednesday, January 26, 2011

ஆடுகளம் - என் பார்வையில்


                                                                                                                       -மரா
                      போன வாரம் ஆடுகளம் பார்த்தேன். பாசம், புகழ், போட்டி, கர்வம், பொறாமை, விசுவாசம், துரோகம் என முற்றிலும் வித்தியாசமான பரிணாமத்தில் தமிழில் இது போல ஒரு படம் வர இத்தனை நாளாயிருக்கிறது, படம் பார்த்து முடித்ததும் 1990 ஆம் ஆண்டு M.T.வாசுதேவன் நாயர் எழுதி அஜயன் இயக்கி திலகனும் , பிரஷாந்தும் நடித்த பெரும்தச்சன் என்னும் மலையாள மொழித் திரைப்படம்  நினைவுக்கு வந்தது, இரண்டின் கதைக்களம் வேறு என்றாலும் சொல்லும்  செய்தி ஒன்றே!!!, அது கட்டிடக்கலை, இது சேவற்சண்டை. அது அத்தனை தரமான படைப்பு என்பதால் தான் அதனுடன் இந்த  ஒப்பீடு.
                                                                                
                         நம் திருநாட்டில் இறைச்சிக்காக நாள்தோறும் கணக்கேயின்றி
ஆடுகளும் மாடுகளும் பன்றிகளும் வெட்டப்படுகின்றன.ஆயினும் ஒரு ஆட்டையோ மாட்டையோ நாயையோ,பூனையையோ குரங்கையோ சேவலையோ திரைப்படத்தில் காண்பித்தால் மிருகவதை என்று கொடி பிடிக்கவும் கோஷம் போடவும் ஒரு மிருகவதை தடுப்புக் கூட்டமே இருக்கிறது. இதனால் தான் படத்தில் மிக  ஆக்ரோஷமாக காட்டவேண்டிய சேவல் சண்டையைக் கூட கம்ப்யூட்டர் க்ராபிக்ஸில் எடுக்கவேண்டியதாகிவிட்டது போலும். 
                                                                              
                   எனக்குத்தெரிந்து பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே படத்தில் கூட சேவல் சண்டை மிக உக்கிரமாக காட்டப்பட்டிருக்கும், சேவலுக்கு சாராயம் புகட்டுவது, சேவலின் கால்களில் கூரிய கத்திகளை அணிவித்து சண்டைக்கு பறக்கவிடுவது என்று 90களிலேயே இந்த விஷயத்தை மிக டீடெய்லாக காட்டிவிட்டனர். பொல்லாதவனுக்கு டீடெய்லிங்கில் மிரட்டிய வெற்றிமாறன் இதில் சாதித்து இருந்தாலும் நாக்அவுட் சாதனை எல்லாம் புரியவில்லை. பொல்லாதவனில் பைக் திருட்டுப்போகும் போது கருணாஸ் தனுஷை புதுப்பேட்டைக்குள் கொண்டு செல்கையில் நாமும் நம் பைக் காணாமல் போனது போலவே பதட்டத்துக்குட்பட்டிருப்போம். 

              வடசென்னை வாசியாகவே மாறியிருப்போம். எத்தனை நிழல் மனிதர்களைப் பார்போம்? இதில் அந்த தீஸீஸ் இல்லை என்று மிகவருத்தத்துடன் சொல்லவேண்டியிருக்கிறது. இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தான் எனக்கு கபடி விளையாட்டின் விதிமுறைகளே தெரியும். அந்த அளவுக்கு சிறப்பானதொரு தீஸீஸ் கொண்டது அப்படம், கூடவே கைகொடுத்த டிடிஎஸ் ஒலிப்பதிவு, மிக்ஸிங். வேறு, ஆனால் சேவல் சண்டையை முன்னிறுத்தி பயணிக்கும் தீஸீஸ் என்பது டைட்டில்கார்டு நேரேஷனைத் தவிர  வேறெங்கும் இல்லை என்பதில் வருத்தம் தான். ஆனால் வெற்றிமாறன் மெத்தனமாக இருக்கவில்லை.ஆனவரை பாடுபட்டிருக்கிறார். சென்சா‌ர் அதிமேதாவிகள் வேறு படப்பிடிப்புக்கு முன்னும்,பின்னும் சேவல்கள் ஆரோக்கியமாக இருந்ததா? என்று மருத்துவரின் சான்றிதழ் கேட்டனராம், அவனுங்க தலைல இடி விழ.
                                                                        
          வெற்றிமாறனின் ரியாலிட்டி காட்சியாக்கத்துக்கு ஒரு உதாரணக்காட்சி சொல்கிறேன்.ஏதோ ஒரு போலீஸ் ஸ்டேஷனில் தன் பாரில் வைத்து டூப்ளிக்கேட் சரக்கு விற்கிறார் என்று கிஷோரை பிடித்துக்கொண்டுபோய்,  உட்காரவைத்துவிடுவார்கள். அப்போது இன்ஸ்பெக்டர் நரேன் ஒரு அழுக்கு போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளே வருவார்.அங்கே பூனை மியாவ் என்று கத்தும் சத்தம் பிண்ணணியில் ஒலிக்கும். அங்கு இருக்கும்  எஸ் ஐ உள்ளே சிக்கன் பிரியாணி சாபிட்டுக்கொண்டிருப்பார். நரேன் வெளியே இருக்கும் தகவலை ஒரு கான்ஸ்டபிள் சொன்னதும்,அந்த எஸ் ஐ கைகூட கழுவாமல்,சாப்பாட்ட மூடி வைய்யா, பூனை வாய் வச்சிடப்போகுது என்றுவிட்டு வெளியே வருவார்.அப்போது போலீஸ் கைலி அணிந்திருப்பார்.போலீஸுக்கு போலீஸ் கொடுக்கும் போலி மரியாதையை கொடுத்து வணக்கம் வைப்பார் பாருங்கள்,இது உலகத்தரமான காட்சி என்பேன்.

                       இந்த அளவு நுட்பமாய் வர எவ்வளவு உழைத்திருக்கவேண்டும்? அநேக போலீஸ் ஸ்டேஷன்களில் காகிதக்கோப்புகளை எலிகள் தின்று விடுவதால் எலிபிடிக்க பூனைகளை வளர்க்கின்றனர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?, அதைக்கூட ஆழ்ந்து அவதானித்து ஒரு உலகத்தரமான காட்சி வைத்தவர். நாயகன் கருப்புவின் சேவல் தொடர்ந்து எல்லா சேவல்களையும் வெற்றி கொள்ளும் அளவுக்கு எப்படி அதை தயார் செய்தார்,என்று நம்பும் படி சொல்லியிருக்கவேண்டாமா? அவருக்கு அந்த சேவல் மீதான் அபார நம்பிக்கை எப்படி வருகிறது?,அவர் பாதி நேரம் ஐரின் பின்னாடியே சுற்றியும், எப்படி அந்த சேவலை வீரதீரம் பொருந்தியதாக்கினார் என நன்கு சொல்லுவதற்கென்ன கொள்ளை?

                   தனுஷுக்கு இப்படத்தில் நடிப்பில் மிகப்பெரிய போட்டி நிலவுகிறது. மனிதர் உணர்ந்து செய்பவர், இதிலும் செய்திருக்கிறார். அவரின் காதலில் விழுந்து தவிக்கும் காட்சிகள், அம்மா இறந்துபோனதும் கிடந்து உருகும் காட்சிகள் மிகவும் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளன.  ஆங்கிலோ இந்தியக்காதலி ஐரின் மிகவும் அழகு, ஆயினும் இவருக்கு தனுஷின் மீது கட்டாயத்தின் பேரில் காதல் வருவது நம்பும்படியில்லை, இன்றைய தேதியில் இளம் பெண்கள் மிகவும் விபரமாக இருக்கின்றனர். திருமணத்துக்கு முன்னரே எல்லா மேற்படி வேலைகளையும்  பருவத்தே பயிர்செய்து முடித்துவிடுவது நகரமாந்தர்களிடம் சகஜமான ஒன்றாய் இருக்கிறது, அப்படி இருக்கையில் , இவர் தனுஷுடன் நம்பி ஓடிவருவது நம்பும்படியாக இல்லை.

              படத்தில்  பேட்டைக்காரனாக வாழ்ந்த என் நண்பர் வ.ஐ.செயபாலன், ரத்னவேலு என்னும் போலீஸ் இன்ஸ்பெக்டராய் வந்த நரேனும் மிக அருமையாக நடித்திருந்தனர். அந்த போலீஸ் இன்ஸ்பெகடர் நரேன் மிகவும் எதிர்பார்ப்பை கூட்டிவிட்டார். படத்தில் பேட்டைக்காரனின் சேவல்சண்டையின் பால் மையல் கொண்டு பெற்றோரை எதிர்த்து அவருடன் ஓடி வந்து குடும்பம் நடத்தும் மீனாள் மிக அருமையான நடிகை, அவருக்கு தவமாய் தவமிருந்திற்கு பின்னர் மிக நல்ல பாத்திரம், 28வயது மூத்த பேட்டைக்காரனுக்கு ஜோடி, அப்பன் வயசு, பீடோஃபீல் என்று ஆகிவிடக்கூடிய பாத்திரப் படைப்பு, எந்த லஜ்ஜை, சங்கோஜமுமின்றி பிண்ணிப்பிணைந்து ஈடுபாட்டுடன் நடித்துள்ளார்.அவருக்கு பாராட்டுக்கள்.

              கிஷோர் என்ன ஒரு அருமையான நடிகர்?. பொல்லாதவனில் கிஷோரைப்பார்த்து இப்படி ஒரு நடிகனா? யார்டா அது? என்று அந்த தெனாவெட்டான பார்வைக்கும் ஏற்ற இறக்கமாக மழலைத்தமிழ் பேசும் குரலுக்காகவுமே சுமார் ஐந்து முறையேனும் பார்த்தது, வெண்ணிலா கபடிக்குழுவில் நெல்லைத் தமிழ் பேசுயது கூட நன்றாகவே இருந்தது.  வம்சம் படத்திலும் இவர் பேசும் தமிழ் எங்குமே நிரடலாகவே இல்லை. புதுமுகம் பேட்டைக்காரனுக்கு மிக அருமையாக பொருந்திவந்த ராதாரவியின் குரல், பழகியவரான கிஷோர் விசயத்தில் பொய்த்தது.   இதில் சமுத்திரக்கனியின் நயவஞ்சகம் ததும்பும் டப்பிங் குரல் எதற்கு வைத்தார் வெற்றிமாறன்?, இந்த குரலாலேயே இவர் மீது பார்வையாளருக்கு சந்தேக விதை விழுந்துவிடுகிறது. இந்த குரலாலேயே இவர் கிஷோர் தானா? என்னும் சந்தேகமே வருகிறது. உண்மையிலேயே கிஷோரை மிகவும் மிஸ் செய்தேன்.இதில் சுப்ரமணியபுரம் படத்தின் ஏனைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் மதுரை மண்ணின் மாந்தர்களான அவர்கள் வீணடிக்கப்பட்டிருக்கின்றனர்.

                    தவிர இவர் பேட்டைக்காரன் மனைவிக்கு வாங்கித்தரும் வளையல்கள் குறைந்தது மூன்று பவுனாவது இருக்கும்,,படத்தில் அதன் மதிப்பை 19ஆயிரம் என்கின்றனர். கடந்த ஒருவருடமாகவே தங்கம் பவுன் சேதாரம். செய்கூலியெல்லாம் சேர்த்து பவுனுக்கு 20அயிரம் வந்துவிடும். ஆக 60ஆயிரம் பெறுமானமுள்ள வளையலை 19ஆயிரம் என்றது உறுத்தல். இது சமகாலத்தில் நடக்கும் கதை என்பது மதுரையின் போத்தீஸை காட்டுகையில் டிவி எஸ்  கேஸ் ஆட்டோ ரிக்ஸாவை பார்க்கையில் புரிகிறது.இதுபோல பிழைகளை  எதிர்காலத்தில் தவிர்க்கவேண்டும்.

             ஜி.வி.பிரகாஷின் பிண்ணணி இசைக்கு சொல்லிக்கொள்ளும்படி ஒரு முதல் படம் என்றால் அது இதுதான். பாடல்களும் அருமை. தரமான இசையை அவர் வழங்கியுள்ளார்.படத்தின் ஒலிப்பதிவிலும் டிடிஎஸ் 5.1 மிக்ஸிங்கிலும் சிறப்பாய் கவனம்  செலுத்தியிருந்தால் மேலும் மெருகேறியிருக்கும். வேல்ராஜின் ஒளிப்பதிவு நேர்த்தியான ஒன்று. இருளில் முக்கால்வாசி காட்சிகள் நகர்ந்தாலும் மிக டீடெய்லாக இருந்தது. இயக்குனருக்கு தோள்கொடுத்து கதையின் போக்கினூடே அமைந்த ஒளிப்பதிவு என்பேன்.  கதாபாத்திரங்களின்முகபாவங்களுக்கு முக்கியத்துவம் தந்த ஒளிப்பதிவு. இனி பாலா போன்ற உணர்வுரீதியாக படங்கள் எடுக்கும் இயக்குனர்களுக்கு வெற்றிமாறன் மிகப்பெரும் போட்டியாக இருப்பார் என்பது அடியேனின் நம்பிக்கை.