-மயில்ராவணன்
அஜித். அதுதான் அவன் பெயர். சினிமா நடிகரை நீங்கள் நினைத்துக் கொண்டால் அது என் தவறல்ல. அஜித் அவன் பெயர். அழகு என்று அவனை இந்தக் கதையில் நான் சொல்லப் போவதில்லை. கறுத்த நிறம். கறுத்த மீசை. ஆனாலும் ஒரு கவர்ச்சி தன்னிடம் இருப்பதாக நம்பிக் கொள்வான். அவனுக்கு ஒரு காதலி இருக்கிறாள்.அவள் என்ன நிறத்தில் இருக்கிறாள் என்பதை இவன் தான் இன்று நேரில் பார்த்து நமக்கெல்லாம் அவள் அழகானவளா? என்று சொல்லப்
போகிறான். அவளைப் பார்ப்பதற்காதத்தான் ஹோட்டல் அசோகாவிற்கு வெள்ளை நிற சட்டை நீலவர்ண பாண்ட்டினுள் இன் செய்து பெல்ட் போட்டு, கட் சூ மாட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான்.
அஜித்தின் காதலியின் பெயர் ஷில்பா.பெயரே கவர்ச்சியாய் இருக்கிறதல்லவா? ஷில்பாவோடு செல்போனில் தான் கடந்த ஒரு மாதமாக இவனுக்குப் பழக்கம். அவள் தான் முதலில் இவனை கூப்பிட்டது! முருகவேல் சாரா என்றாள். இவன் முருகவேல்இல்லை...அஜித் என்றான். சாரி சார் .......தப்பான நெம்பருக்கு கூப்பிட்டு விட்டேன்.......ஆனா உங்க வாய்ஸ்.......அழகா இருக்கு சார்...என்றதும் தான் இவன் மறக்காமல், உங்கள் வாய்ஸ் குயில் கூவுவது போல இருக்கிறது என்றான்.
இப்படித்தான் ஆரம்பித்தது!காதல் எப்படி வேண்டுமானாலும் உதயமாகிவிடுமல்லவா? இவர்களுக்கும் உதயமாகிப் பூத்துவிட்டது. ஷில்பா ஷில்பா என்று உருகி வழிந்தான்.உங்களுக்கு எங்கே வேலை? என்றாள். இவன் தன் ஆபிஸ் சொன்னான்.உங்களுக்கு? என்றான். ’வாங்க’ ’போங்க’ என்று பேசுவதை விட்டுவிடுங்கள் அஜித் என்று கொஞ்சினாள். உனக்கு எங்கே வேலை என்றான்.
அசோகா ஹோட்டலில் ரிசப்சனிஷ்டாக வேலையில் இருப்பதாக கூறினாள். சந்திக்க வரவா?பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்றான்.அங்கும் அதே
நிலைமைதானே!எப்ப வர்றீங்க? என்றாள். ஆபிஸ் முடிந்ததும் என்ன வேலை. ஆறு மணிக்கு வருகிறேன். எந்த இடத்தில் உள்ளது? என்று கேட்டு தெரிந்து கொண்டான். இதோ கிளம்பிவிட்டான் தனது ஹீரோ ஹோண்டா ஸ்பெளண்டரில்!
ஒரு காதலியை முதன்முதலாக பார்க்கச் செல்பவனுக்கு வழக்கம்போல படபடப்பு இருக்க வேண்டுமே!ஆமாம்.மனசு முழுக்க காதலை சுமந்து கொண்டு சினிமா கதாநாயகன்
போலவே நகர வீதியில் சென்றான். தமிழ் சினிமாவுக்கு பெரிய துரதிஷ்டமே நம்ம அஜித் அவர்கள் கண்ணில் படாமல் இருப்பது தான். காதல் தேவதையை அவன் சந்தித்ததும் கையும் காலும் ஓடுமா? நமக்கே பதைபதப்பாய்த்தான் இருக்கிறது!
இதோ ஹோட்டல்! பைக்கை ஓரம் கட்டிவிட்டு கண்ணாடிக் கதவிற்கு உள்ளே பார்த்தவன் அசந்து போனான். ச்சே! ஷில்பாவா? ’விண்ணைத்தாண்டி’ வந்த ஜெசி த்ரிஷாவா? பெரிய மச்சக்காரன் நான்தான்!கடவுளே உனக்கு நன்றி!ரிசப்சனில் இருக்கைகள் காலியாக இருந்தன!
மூலையில் ஒரு அம்மா அமர்ந்திருந்தது! இவள்தான் பெரிய பேரேடு ஒன்றை விரித்து பேனாவில் கோடு போட்டுக் கொண்டிருப்பாள் போலிருக்கிறது! காவலாளி நீலவர்ண யூனிபார்மில் இவனைப் பார்த்து புன்னகைத்து உள்ளே போகணுமா? சார்? என்றான்.
இல்லை. நண்பர் வரவேண்டும்,வந்துவிடுவார், என்றவன் தன் செல்போனை எடுத்து ஷில்பாவை கூப்பிட்டான்.ஓரக் கண்ணால் ஷில்பாவைப் பார்த்தான். தன் ஹேண்ட்பேக்கிலிருந்து சந்தோஷமாய் காதுக்கு கொடுத்தாள். இவன் வேண்டுமென்றே சாலையைப் பார்த்து நின்றான்.
- ஹலோ அஜித்...வந்துட்டிங்களா?
- இல்ல ஷில்பா..வந்துகிட்டே இருக்கேன். இடையில ஒரு நண்பன் காபி ஷாப்புக்கு போயிட்டு போலாம்னு கம்பெல் பண்ணி கூட்டிட்டு வந்துட்டான்.
- என்னை விட நண்பர் பெருசாப் போயிட்டாரா? என்றாள் ஷில்பா. இவன் அவளைத் திரும்பி நேரே பார்த்த வண்ணமே பேசினான். அவளும் பேசியபடியே இவன் கண்களைக்
கண்ணாடிக்கு இந்தப் புறம் பார்த்தாள்.
- சாரி ஷில்பா..நீ தான் எனக்கு முக்கியம், என்றவன் அவள்
பார்த்த பார்வையின் இன்ப அதிர்ச்சியில் தத்தளித்தான்.
- நான் முக்கியம் தான..சீக்கிரம் கிளம்பி வாங்க..ரிசப்ஷன்
காலியா இருக்கு.உங்க கூட ஃப்ரீயாப் பேச டைம் இருக்கு.
- அப்படியா..இதோ அவன்ட்ட விடைபெற்றாச்சு.....கிளம்ப வேண்டியதுதான்.
- ஒரே துடியா துடிச்சுட்டு இருக்கேங்க அஜித். இன்னும்
எவ்ளோ நேரம் ஆகும்? ’ சிணுங்கிக்கொண்டே கெஞ்சலாய்
பேசினாள். இவனுக்கு கண்ணாடியை உடைத்து சென்று
விடலாம் என்றே ஆயிற்று! அவள் இவனை பார்க்கையில்
உதட்டை கடித்து புன்முறுவல் பூத்தான். திடீரென இவனை
உற்றுப் பார்த்தவள் போனில் பேசினாள்.
- ஐயோ சீக்கிரம் வாங்க அஜித். இங்க என்னால நிற்கவே
முடியல. எங்க ஹோட்டல் கண்ணாடி கதவுக்கு அந்தப்பக்கம்
ஒரு கருமன் நின்னுகிட்டு பொறுக்கித்தனமா உதட்டை
கடிக்கிறான்......சேட்டை பண்றான் அஜித்! போன் பேசிகிட்டே
பந்தா காட்றான் கொரங்கு....அவனும் அவன் மூஞ்சியும் ...
சிம்பன்ஸி பேண்ட் போட்டு இன் பண்ணிக்கிட்டு இருக்கிறதை
இன்னிக்கித்தான் பார்க்குறேன்...ஐயோ சீக்கிரம் நீங்க வாங்களேன் அஜித்...!
டிஸ்கி:
எம்புட்டு நாளைக்குதான் படத்துக்கு விமர்சனம் எழுவிக்கிட்டு இருப்பன்னு சொல்லி நாலைந்து புத்தகங்கள் ஃப்ரீயாக் குடுத்து,சிறுகதைகள் எழுது என்று
தூண்டிய அண்ணன் சிவராமன்க்கு நன்றிகள் பல.
டிஸ்கி:
எம்புட்டு நாளைக்குதான் படத்துக்கு விமர்சனம் எழுவிக்கிட்டு இருப்பன்னு சொல்லி நாலைந்து புத்தகங்கள் ஃப்ரீயாக் குடுத்து,சிறுகதைகள் எழுது என்று
தூண்டிய அண்ணன் சிவராமன்க்கு நன்றிகள் பல.