Thursday, November 26, 2009

The Great Pied Hornbill இருவாச்சி

                         தி க்ரேட் பைட் ஹார்ன்பில் 
                                                                                                                       கோகுல்
           டாப்ஸ்லிப் யானைகள் முகாமிற்கு போகும் வழியில் உள்ள மழைக்காட்டில் காரில் செல்லும்போது, உதவியாளர் ஒருவர் “அதோ, இருவாச்சி பாருங்க” என்று சொல்லி வலப்புறம் சுட்டிக்காட்டினார். காரில் இருந்த பயணிகள் அனைவரும், கேமராக்களை இயக்கி படம் பிடிக்க முயற்சி செய்தனர். நானும் ஒரு பெரிய பறவை தன்னை மறைத்துக் கொள்ள ஒரு உயரமான மரத்திலிருந்து மற்றொரு அடர்த்தியான மரத்திற்கு பறந்து செல்வதைக் கண்டேன். திரு.தியோடர் பாஸ்கரனுடைய நூலிலிருந்து இது மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு அறிய பறவை என்றும், இதனுடைய இருப்பு கேள்விக்குறியாகி வருகிறது என்பதையும் அறிந்திருந்ததாலும், மற்ற பயணிகள் அதை மேலும் பார்ப்பதற்கு முனைப்பு காட்டாத காரணத்தால் ஒரு புகைப்படம் கூட எடுக்க முடியாத வருத்தத்துடன் அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.





                   ஆனாலும், ஊருக்கு திரும்பியவுடன் அந்த அறிய பறவையை பற்றி மேலும் சில விஷயங்களை தெரிந்து கொண்டேன். இதற்கு சலீம் அலியின் புத்தகம் உதவியாக இருந்தது. இது ஒரு endangered species என்பதை அறியும்போது சற்று கவலையாக இருந்தது. கருப்பு, வெள்ளை நிற உடலும், வெள்ளை வாலில், கருப்பு பட்டையும், மிக வசீகரமான, பெரிய மஞ்சள் மற்றும் சிகப்பு கலந்த அலகையும் கொண்ட அழகான ஒரு பெரிய வளர்ந்த வல்லூறின் பருமனைக் கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகள் என்று அழைக்கப்படும், மழைக்காடுகளில், நெடிதுயர்ந்த மரங்களின் மேல் இவற்றை காணலாம். இதனுடைய கடுமையான சத்தம், கானகத்தில் தனியே பயனம் செய்கின்ற யாரையும் ஒரு நிமிடம் கலக்கி விடும் என்பதில் சந்தேகமில்லை.



     

                    சோலைக்காடுகளின் பரப்பளவு குறைக்கப்படுவதும், மழைக்காடுகள் தேயிலைத்தோட்டங்களாக மாற்றம் அடைந்து பசுமை பாலைவனமாக மாறி வருவதும் இந்த இனம் பூண்டோடு அற்று போவதற்கு வழிவகை செய்துள்ளது. 

                   Madras Naturalist Society-ன் member-களான பிரசன்னா மற்றும் விவேக் இவர்களின் ஒரு கட்டுரை என் கவனத்தை இரண்டு நாட்களாக கலைத்துப் போட்டது. அது பாண்டிச்சேரிக்கு அருகில் பிடிபட்ட லேசாக காயமடைந்த ஒரு ஹார்ன்பில் Hornbill பற்றியதாகும். இப்பறவை தற்போது வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கவேண்டும் என்று வண்டலூருக்கு அலுவலகத்தில் விசாரித்தபோது, பெரும்பாலும் veterinary – ல் வைக்கப்பட்டிருக்கும் என்ற பதிலை கேட்டபோது, அதிர்ச்சியாக இருந்தது. மிக மோசமான நிலையில் இருக்கும் பறவைகளை அங்கே வைத்து மருத்துவர்கள் பராமரிப்பது சகஜம். ஆனாலு, மேலும் விசாரித்தபோது, அது மீண்டும் கூண்டில் விடப்பட்டதும் , தற்போது பார்வைக்கு இருக்கிறது என்பதையும் அறிந்த போது, அந்த இறுக்கம் தளர்ந்தது   





கம்பி வலைகளுக்கு இடையில், வெட்டி நடப்பட்ட மரக்கிளையின் மீது அமர்ந்து கொண்டு, எப்படியும் தப்பி விடலாம் என்ற ஆசையுடன் அங்கும் இங்கும் தாவிக்கொண்டிருந்தது. இப்படி ஒரு அதிசயமான பறவையை மிக அருகில் இருந்து பார்க்கும்போது, சற்று உணர்ச்சிகரமாகத்தான் இருந்தது. நேர்த்தியான தன்னுடைய கொண்டையை எப்போதும் சுறுசுறுப்புடன் சுழட்டிகொண்டே இருந்தது. வெகு நேரம் இதன் கூண்டிற்கு அருகில் அமர்ந்து இதனுடைய செய்கையை பார்த்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட 2 மணிநேரம் அமர்ந்திருந்தேன் எனும்போது, அதனுடைய வசீகரத்தை வேறு வார்த்தைகளில் சொல்வதற்கு தெரியவில்லை.
          பொதுவாக இவை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து மும்பைக்கே வலசை போவதாகவும் மிக அரிதாக வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் தற்போது பிடிபட்ட இந்த பறவை பாண்டிச்சேரிக்கு அருகில் என்பதை அறியும்போது குழப்பம் மேலிடுகிறது. சலீம் அலி இந்த பறவை அரிதாகி வருவதற்கு இதனுடைய உணவுத்தேவையும், நெடிதுயர்ந்த சோலை காடுகளில் மரங்கள் வெட்டப்படுவதும் மிக முக்கிய காரணங்கள் என்று குறிப்பிடுகிறார். இவை சிறிய அளவிலான, பல்லி, பாம்பு முதலிய காணுயிர்களையும்  பழங்கள் , கொட்டைகளையும் தின்று வாழும். அதிகபட்சமாக 2 முட்டைகளை மட்டுமே இடும். அரசு இப்பறவையை காப்பாற்ற மிகச்சிறப்பான முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும் மிச்சமுள்ள சோலைகாடுகள் சிறப்பான முறையில் பாதுகாக்கப்படாமல், அழிக்கப்பட்டால் நம்முடைய அடுத்த தலைமுறை இவற்றைப்பற்றி அறிந்து கொள்ள மிருககாட்சி சாலைகளுக்கு கூட செல்ல முடியாத நிலை விரைவில் வரும். ஏற்கனவே பல சிறப்பான பறவைகளை இழந்திருக்கிறோம். 
           அடுத்த முறை ஏதேனும் ஒரு சோலைக்காட்டின் உயர்ந்த மரமொன்றில் வாழும் இந்த பறவையின் சொந்தகாரர்களைப் பார்க்கும் போது, உங்கள் குடும்பத்தில் ஒருவர் எங்கள் ஊருக்கு அருகில் கூண்டுக்குள் தங்களின் இருப்பை இந்த உலகத்திற்கு அறிவிக்குமாறு வாழ்கிறார் என்பதை உரக்கச் சொல்லவேண்டும் போலுள்ளது.
    
       காம்ரேட் நண்பருக்கு என் மனமார்ந்த நன்றிகளை என்னை அழைத்துச் சென்றதற்காக தெரிவித்துக்கொள்கிறேன்.


மேலும் புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு பின்வரும் இணைப்பைப் பார்க்கவும்.










Monday, November 16, 2009

கால்சென்டர் காதல் (The Other End Of The Line)

கோகுல்

ஸ்ரேயா நடித்திருக்கும் திரைப்படம் என்றவுடன் ஆவலாகப் படம் பார்க்கத்தொடங்கிய எனக்கு படம் பிடித்துப்போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அதோடு மட்டுமல்லாமல் நீண்ட நாட்களாகவே இப்படி ஒரு சம்பவத்தை மனது அசை போட்டுக்கொண்டிருந்த்தும் பட்த்தைப் பிடித்ததற்கு காரணமாக இருக்கலாம்.


மும்பை சிட்டி ஒன் கால் சென்டரில் பணிபுரியும் பிரியா சேத்தி என்ற பெண்ணிற்கும் அதனுடைய நியூயார்க் கஸ்டமர் கிராண்டியருக்கும் இடையிலான காதலை மிக அழகாக திரையில் வடித்திருக்கிறார்கள். இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு எழுந்து அமெரிக்க குட்மார்னிங் சொல்லும் பெண்ணாக ஸ்ரேயா நடித்திருக்கிறார். அமெரிக்க அக்சண்டில் பேசி கிராண்டியருடன் நட்பு கொள்கிறார். அதே நேரத்தில் இந்தியாவில் திருமணம் நிச்சயமாகிறது. இந்நிலையில் கிராண்டியரைப் பார்த்து அவருடன் பழக முடிவெடுத்து , வீட்டில் யாருக்கும் சொல்லாமல் அமெரிக்கா செல்கிறார். கிராண்டியர் தன்னுடைய புராஜக்டிற்காக தங்கி இருக்கும் அதே ஹோட்டன் ஹாக்சனில் தானும் தங்கி , கிராண்டியரை சந்தித்த பின்பும் , உண்மையை சொல்லாமல், பொய்யான காரன்ங்களை சொல்லி நட்பாகிறார்.

இதற்கிடையில் ஸ்ரேயாவைத் தேடி அமெரிக்கா வரும் பெற்றோரின் லொள்ளு சற்று சிரிப்பைத்தந்தாலும், உண்மையில் கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது.
ஹோட்டல் அதிபருடன் புத்திசாலித்தனமாக பேசி ஸ்பெஷல் கெஸ்டாக ஆகும் இட்த்தில் கிராண்டியர் மனதில் ஆழமாக பதிகிறார். கிராண்டியருடன் விருந்திற்கு செல்லும் இட்த்தில் பெற்றோரை தற்செயலாக சந்திக்க , உண்மையை அறிந்து கொண்ட கிராண்டியரிடமிருந்து பிரிந்து இந்தியா வந்து விடுகிறார்.

புராஜக்டை முடித்த கையோடு, ஸ்ரேயாவின் காதலை விட முடியாமல் கிராண்டியர் அமெரிக்காவில் தவிக்கிறார். அமெரிக்கர்களின் வாழ்வோடு இந்தியர்கள் எவ்வாறு கலந்திருக்கிறார்கள் என்பதை திரைபட்த்தின் பல்வேறு இடங்களில் காண முடிகிறது. கிராண்டியர் இந்தியா வந்தாரா, ஸ்ரேயாவை கைப்பிடித்தாரா என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

கலாச்சாரம் மாறி வருவதையும், தலைமுறைகள் எல்லையைத்தாண்டி சிந்திப்பதையும் மிக அழகாக சித்தரிதிருக்கிறார்கள். ஆரோக்கியமான மாற்றங்கள் உருவாக வேண்டும்.

ஒரு நல்ல பொழுதுபோக்கு படம் பார்த்த திருப்தி கிடைக்கும் என்பதற்கு உறுதி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்களேன். நன்றி....

நாயி வாயிச்சீல

(அகாலமாக மரணத்தை தழுவிய அபிராமிக்கு இந்தக் கதை சமர்ப்பணம்)
மு.ஹரிகிருஷ்ணன்


தெரட்டி முடிஞ்சதும் பொறப்படலாம்னா எங்க முடியிது? சொணையான இன்னுமே வரிக்கல.மணி பதனொன்னாவுதோ ! பன்னண்டாவுதோ தெரில. ஆட்டத்துக்கும் போயிக்கிட்டு
அலங்காரத்துக்கும் போறதுன்னா சாமானியமா? கயிட்டத்தப்பாத்தா காச கண்ல காங்கிறத்தெப்பிடி? நாமக் கைத்தொட்ட காரியமாறதெப்பிடி? எரநூறு வருதோ முன்னூறு வருதோ நாயனக்காரன இருந்து வாங்கியாடான்னு நாம்ப நம்ம தொந்தரவுக்கு போயிரலாந்தான். ஆனா இண்டம் புடிச்சவன் அதக்கொண்டி எங்கியாச்சும் கூத கீதப்போட்டுக்கிட்டு வந்திட்டான்னா ஒரே ஒத்தப்பைசாவ திலுப்பி வாங்க முடியாது.


பொட்டைங்கன்னு அவனுக்கு மட்டுமில்ல, இந்த வையகச்சனம் முச்சூட்டுமே
எளக்காரந்தான்.பெறத்தியார ஏஞ்சொல்லனும்? பெத்தவெளே நம்ம தலமேல கொலாய
வச்சித்தேக்கிறா. அபிராமி புள்ள இருந்தவரிக்கும் ஓரேடத்துக்குப் போவ வர
பேசப்புடிக்க பக்கத்தொணையாயிருந்தா அவளத்தான் அனாமுத்தா மண்ணுக்கு
வாரிக்கொடுத்திட்டமே.


பொம்பளயா பொறக்க வேண்டியவ ஆம்பிளயா பொறந்த அவ அடைஞ்ச சிறும கொஞ்சமா?நஞ்சமா? பொன்ன உருக்கி பூமில வாத்தாப்பிடி , தங்கத்தை உருக்கி தரையில
வாத்தாப்பிடி! தகதகன்னு ஆளும் அவ அழவும் பிள்ளய பாத்தா கண்லு பசியாறும்.
பாதியில போறதுக்குதாம் பாவிமுண்ட அப்பிடியிருந்தாளோ என்னம்மோ!
சாவுற வயசா சண்டாளிக்கி?


ஆடிக்காத்துல பூளப்பூவு பறக்குமே அப்பிடி ஓடி ஓடிச் சம்பாரிச்ச சொத்தும்
அவளக்காப்பாத்துல , பிருசனே இவந்தான்னு நம்பி பூசப்போட்டு கும்பிட்டுக்கிட்டிருந்தாளே தேவூரு கவுண்டம் மவன்! அவனும் அவளக் காப்பாத்தல.ஒக்கிலிப்பட்டி சாமியாருக்கிட்டதான் நானும் அவளும் கூத்துப் படிச்சம்.கூத்துப்படிச்சமில்ல அதுக்கு மிந்தியே அபிராமி தாயம்மாளிண்ட கைப்போட்டு பச்சச்சீலக்கட்டி போத்திராசி மாதாளுக்குப் பாலுக்கொடம் எடுத்துப்பிட்டு வந்திட்டா. பாலுக்கொடம் எடுத்தாளில்ல, அந்த ஒரு மண்டலமும் நாப்பத்தியெட்டு நாளும் அவப்பட்ட வாதயச் சொன்னா கல்லுங்கரையும் , மண்ணும் உருகும்.
அப்பன், ஆயா, பெத்து, பொறப்பு அத்தனப் பேத்துக்கும் விரோதமாகி, அடிப்பட்டு, துணிப்பொறுக்கி, அனாதியாட்டம் ஊட்டவுட்டு பம்பாயிக்கி ஓடி, பூக்கார
ஆயா சாமாத்துல சேந்து, பைட்டேண்டுக்கு பைட்டேண்டு, வீதிக்கு வீதி , சந்துக்கு
சந்து,அல்லெடுத்து அங்கேயிருக்கிற பொட்டைங்களுக்கு அல்லாம் ஒரு வருசம், ஆறு
மாசம் ராத்திரிப் பகலா ஊழியஞ் செஞ்சா.


ஊழியஞ்செஞ்சவளுக்கு கைப்போட்டுத் துப்பரவு பண்டறமின்னுச் சொன்னவிங்க பேச்சு சுத்தமா இருக்கனுமா வேண்டாமா? இன்னைக்கி, நாளக்கின்னு சாக்குப்போக்கு சொல்றாங்களே தவிர ஒவ்வொரு தாயம்மாக்கூட இவளுக்கு கைபோடற மாதரயில்ல. வாக்கியங்கெட்ட கழுதைங்களப் போக்குல வுட்டுப் புடிக்கிலாமுன்னு இவளிருக்க, மறுபடியொமொரு மூணுமாசம் இழுத்தடிச்சி, அதும் பொறவு வடக்க வேண்டாந் தெக்க போலாமின்னு கூட்டிக்கிட்டு வந்தவிங்க ஒரு மாசஞ் சும்மாவே குந்த வெச்சிருந்தாங்க.
குந்த வெச்சிருக்கும்பிடி இவ பொறுக்க மாண்டாம,கோத்தியாவே திரிய இன்னும்மேயெனக்கு விதியா? முடியுமின்னா முடியுமின்னுச் சொல்லுங்க.


இல்ல முடியிலியா பம்பாயிக்கு தாட்டி விடுங்க வழுது சாமத்த அண்டி எனக்கானத நானேப் பாத்திக்கறேன்னு கேக்க, கேட்டவளுக்கு "ஊக்கியில குத்தி இடுக்கியில முள்ளு எடுக்கிற சங்கதியா இது? கைப்போட்டு பொம்பளயாறதுன்னு உனக்கு அவ்ள ரேசா? அதுக்கெல்லாஞ் செட்யானப்படிக்கி தெகிரியம் வேணும் , நீ செத்த பொறுமையா இருடி தாயி"ன்னு தேறுதல சொல்லி ஆத்தூருக்கு கூட்டிப்போயி அங்கியுமொரு அஞ்சாறு நாளாட்டம் வெச்சிருந்தாங்க. ஆறாம் நாளு நெறஞ்ச வெள்ளிக்கிழம அன்னக்கி அந்தியோட ஆயாமாருங்க சேலாமாருங்க எல்லாரும் ஒரேத்துருவா கடவீதிக்குப் போனாங்க. போனவிங்க இன்னதுதானில்ல இஷ்டப்பட்ட திம்பண்டத்த நீயி திங்கிறமுட்டும் தின்னுடின்னு அபிராமிக்கு வாங்கி கொடுத்துத் திங்கடிச்சாங்க.


திங்கடிச்சிப்புட்டு அன்ன ராவு மொதாட்டஞ் சினிமாவுக்கும் கூப்பிட்டுப் போனாங்க.
போயிட்டு வந்து , கண்ணாறத் தூங்கு மவளே ! இன்னைக்கு விடியறதுக்குள்ள உனுக்கு
உறுதியா கைப்பொடறமின்னுச் சொன்னாங்க.சொன்னவங்க சொன்ன மாதிரி ரெண்டு மணி
சுமாருக்கு இவளையெழுப்பிச் சுத்தப்பத்தம் பண்டி, சுனிக்கு சரட்லச்சுருக்கு
வெச்சி, அதைச்சுத்தியும் வெள்ளத்துணி சுத்தி சுத்திவுட்டாங்க. சுத்திவுட்டவுங்க
அதும்பொற வொரோ அரச்சணங்க் கூட தூங்கவேப்படாதுன்னு இவுளுக்குக் காவலிருந்தாங்க.
விடிகாலம் நாலு மணிக்கெல்லாம் பாத்துக்க, ச்சும்மா தட புடலா மாதாளுக்கு
முப்பூசயாவுது. பூச ஆவதுக்குள்ளேயே சாமிக்கு மின்ன நெறம்மணம்மா இவள நிக்க
வச்சாங்க.நிக்க வெச்சதும் அந்தல்ல யிந்தல்ல திமறதுக்கில்லாம கையிரண்டையும் பிந்தாயம்மா இறுக்கிப் புடிச்சிக்கிட்டா.


அவ இறுக்கிப்புடிச்சதும் தலமசுத்த சுருட்டி வாயில துருத்தி, மனசார மாதாவ வருந்தடியம்மான்னுப்புட்டு , 'மாதா, மாதான்னு இவ வருந்த,வருந்த , கண்ணமூடி முழிக்கிறதுக்குள்ள மானியப்புடிச்சி பறக்குன்னு அறுத்துப்புட்டா இன்னொரு தாயம்மா. அப்பிடி அறுத்ததும் அடேயேங் கொண்டாலா! காலடியில உதிரம்போவுது தானா காவேரி ஆறாட்டம்.
செவுத்தச் சாத்தி ஒக்காரவெச்சி உதரத்த வழிச்சி, வழிச்சி இவ உச்சந்தல மொதக்கொண்டு உள்ளங்காலு ஒருக்கோடியா சொதம்பப் பூசிவுட்டா தாயம்மா. தாயம்மா பூசப்பூச தம்பட ரத்தத்த தானே காங்கும் பிடி அபிராமி அடி அம்மான்னு மயக்கம் போட்டுட்டா. மயக்கம் போட்டவள கன்னங்கன்னமா அப்பி , அம்மான்னு சொல்லாதடி மாதான்னு சொல்லுடின்னா, அவ எருப்பு தாழமாண்டாம எரியிதே! எரியுதேன்னு தன்னப்பால பெணாத்தறா. தன்னப்பால பெணாத்தும்பிடி அந்த தாயம்மா நல்லெண்ணய கொதிக்கக் கொதிக்கக் காய வச்சி கைப்பொறுக்க கொண்டாந்து அந்த பச்சப்புண்ணு வாப்பாட்டச்சுத்தியும் பலாசனா ஊத்தியுட்டா.
ஊத்த ஊத்த வாட்டமா காட்டிக்கிட்டிருந்தவ ஒருச்சித்தய கழிச்சி ச்சுறு ச்சுறுன்னு
நோவு திலும்பும்படி அந்நேரம் அய்யய்யோ எங்கடவுளேயேன்னு அந்த பிள்ள ஒரு
கத்துதாங் கத்தினாப்பாரு ! கடகால் மட்டத்துலேயிருந்து அந்த கட்டடமே
கிடுகிடுன்னு நடுங்குது! அருவாளோ, கொடுவாளோ தப்பத்தவற நம்ப மேலுலப்பட்டு அதாலவொரு காயமாயிப் போச்சின்னா அதுக்கு எத்தன ஊசிப்போடறம்?எவ்ள மாத்தரத் திங்கறம்? கப்புப்போட்டு சோக்கேத்தி ஆத்துக்குப்போயி, தீர்த்தம் எடுத்தாந்து ஆலாத்திச்சுத்தி, மாதா மொகம் பாத்த பிற்பாடும் , ஆறாத ரணத்துக்கொரு மருந்துமில்ல மாயமுமில்ல.
வலின்னு வாயத்தொறந்துப் புட்டா, மோரியிலக் குந்த வெச்சி ஒலத்தண்ணிய மூட்டு
மூட்டு காவு மேல அடிச்சி வுடறதோடச்சேரி! அத மீறனா வெத்தலயில நல்லெண்ணயத்
தடவிப்பத்து போடறதோடச் சேரி!


ஓடம்போக்காக் கூடப்போயி பக்கதிலேயிருந்து இந்த பாதரவு எல்லாத்தையும்
பாத்திக்கிட்டிருந்த எனக்கு, கைப்போட்டா ,தாயம்மாக்கிட்டதான் கைப்போட்டுக்கினுமின்னுருந்த வைராக்கியம் எங்கப்போச்சின்னே தெரில.அத இன்னக்கி நெனச்சாலும் கை காலு தொவண்டு, கிறுகிறுப்பு பதபதன்னு வந்திரும்,காலோட தொறத் தொறன்னு மல்லும் முட்டிக்கும். அந்த பயத்திலியே நாங்கையும் போட்டுக்கல, கிய்யும் போட்டுக்கல. சொல்லப்புடிக்காம அபிராமிக்கு மின்ன திருட்டு வண்டியேறி ஊருக்கு வந்திட்டன்.உதரக்கட்டு நிக்காம , காஞ்சப்புண்ணு பாதி , காயாத புண்ணு பாதின்னு அப்பிடியே கோமணத்து மேல கோமணங்கட்டி, கட கடயாப் பிச்சையெடுத்து, குருவுக்குப் பட்ட கடங்கட்டிப்புட்டு தாயிப்புள்ளயோட வந்து அவளும் எடஞ்சேந்தா. மரத்த வெட்டி ஆராச்சிம் மாருமேல சாச்சிப்பாங்களா? எதுக்குயிந்த சித்ரவத? எதனாலிந்த கந்தர கோலம்னு கேக்கிற சனத்துக்கு வதிலுஞ்சொல்ல முடில. ஆதியில பகவாம் படச்சபண்டம் அப்பிடியே இருந்து தொலையட்டுமின்னு இருந்தாலும் மூக்கு மேல பீயப்பினாப்போல இந்த அருகருப்ப வெச்சிக்கிட்டு திரிய முடியல. பவானி குட்டமுனியப்பங் கோயிலுதான் நாம் பொறந்த ஊரு. யெங்கப்பம் பழனிச்சக்கிலிக்கிம், ங்காயா பச்சாயா சக்கிலிக்கிச்சிக்கும் நாம் பொறந்தது ஒரேப்பையன். எனக்கொரு பொறந்தவ , அவ பேரு அழிஞ்சிகண்ணி. பொறக்கும்போது உருப்படியாதாம் பொறந்தன், பத்து வயசாச்சோ இல்லியோ இந்தப்பித்து பிடிச்சிட்டிது.


கண்ணுக்கு மையெழுதி ,மண்டயில பூவ சொருவி, கவுனு மாட்டி, கண்ணாடி மின்ன ஆட்டம் போட்டு, ஊட்ல பொம்பளச்சட்டியின்னு பேரடுத்து ஊருல பேரெடுத்து, கூலிநாலிக்கு போற எடத்திலேயும் பேரெடுத்து, கரும்பு வெட்டப்போனத்தாவுல காட்டுக்காரன் கையக்கால கட்டிப்போட்டு , கடவாயிக்கி கல்லையும் , நடுவாயிக்கி புழுலுயும் வெக்க,
பத்துபேரு அதப்பாத்து சிரிச்சாங்களே அன்னிக்கி ங்கெக்கா பாவடயோட ஓடி பூதப்பாடி
கல்பனா ஆயா காலடியில விழுந்தவதான், திலும்பி வூட்டுக்குப்போகவேயில்ல.
வவுத்துக்கு திங்கிற சோத்துக்கும், இடுப்புக்கு கட்ற துணிக்கும் வஞ்சன வெக்காம
வளத்தனா ங்காயதான் எனக்கு பேரு வச்சா! மூக்கு குத்தியுட்டு 'தொளசி' ன்னு அவதான்
பேரு வச்சா. தந்தாவும் வேண்டாண்டி ஒரு கிந்தாவும் வேண்டாண்டி! அலேய் ஆதமுத்து
முண்டைங்களா உருவா சம்பாரிக்கலாமின்னு பத்துப்பேரோட படுத்து நோவு கீவு
வாங்கிட்டம்னா அந்த வெனய எங்கக்கொண்டுப் போயி தீக்கிறது?
ஆடுமாடுகளுக்குக்கூட ஆசுபத்திரி இருக்கிது, நாயிம் தம்புண்ணத்தானே நக்கி
ஆத்திக்கிது.அதோட கேவலண்டி நம்ப பொழப்பு. கண்ணக்கெடுத்தாலுங்கோல
குடுத்தாங்கிறப்பிடி மாதா நம்புளுக்கு ஒழச்சிப்பொழைக்க மாளாத தெம்பு
குடுத்துக்கிறா. வாங்கடி கைய ஊனி கரணம் போடலாமின்னு அம்பது , நூறு பொட்டைங்கள
ஒண்ணாச்சேத்திக்கிட்டுப் போயி கலைக்கிட்டருக்கிட்ட "சாரு, சாரு இந்த மாதர , இந்த மாதர நாங்க சொந்தமா பாடுப்பட்டு தின்னுக்கிறம்,எங்களுக்கு எதுனா ரோனு* கீனு ஏப்பாடு பண்டி விடுங்கன்னு" பிட்டிசனு எழுதிக்குடுத்தா, அவிங்க என்னங்கறாங்க.., ஊடு வாச இருக்குதா? உங்க பேருல சொத்துப் பத்து இருக்குதா? சர்க்காரு வேங்குல ரொக்கம் ரோஜனம், கணக்கு வழக்கு இருக்குதாங்கறாங்க.உங்க சோறு இல்ல, ஒதுங்கவொரு நெவுலடி பாத்தியம் இல்ல, எங்ககிட்ட எதுவுமேயில்ல அத்தாந்தரமா* நிக்கறம். எதோ நீங்க பாத்துவொரு ஒத்தாசப் பண்டுங்கன்னு கெஞ்சினா, அட்ரசீ இல்லாதவங்களுக்கு ரோனு குடுக்க சட்டத்துல எடமில்லங்கறானுங்கவொரு தலயெடுப்பா.., போங்கடா எம்பட்டைங்களான்னு * திலும்பி வந்திட்டோம்.


ஆளாளுக்கு ஒரு தொழுவாடு கத்துக்கடிங்கன்னு ஆயா சாமியாருக்கிட்ட கூத்துப்படிக்க கைகாட்டியுட்டா. சும்மா எப்பிடி சொல்றது சாமியாரப்பன் வெட்டு வெடுக்குன்னு ஒரு வார்த்தப்பேசினதில்ல. பெத்தப்புள்ளங்களுக்கு மேல ஆச அம்பா வெச்சிருந்து அக்குசா
தொழில கத்துக்குடுத்தாரு. அபிராமி கண்ணாலந்தான்* மொதல்ல படிச்சம். அப்பதான் இவளுக்கு அபிராமின்னு பேரு வெளங்கனது. செரியான வுனுப்புக்காரி , எதச்சொன்னாலும் புடிச்சாலும் கப்பூரமாட்டும், ஆட்டம் அப்பிடித்தான். பாட்டும் அப்பிடித்தான். என்னாவொண்ணு சாரீரம் மட்லுங்கொஞ்சங் கட்ட சாரீரம். நெட்டையோ , குட்டையோ சாமியாரு செட்டுக்கு, மொகாம , மெயினு வேசக்காரி இவதாங்கிறாப்பிடி ஆயிட்டா. சரி சரீங்கறாப்பல தொழிலுஞ் செஞ்சா. நாத்து வெளஞ்சி பயிராவறதுக்குள்ள மத்தளக்காரம் பூமுடியூர் ராசி அவள குத்துவதோட்டம் ஓட்டறதுக்கு ஆரம்பிச்சிக்கிட்டான். வூடு வாச அண்டாம, செலவுக்கு அஞ்சிப்பத்து வரும்பிடிய குடுக்காம ஓராம்பள கண்டயெடம் மேஞ்சிக்கிட்டிருந்தா பொட்டப்பொம்பள பிள்ளைங்க குட்டிகள வெச்சிக்கிட்டு என்னாப் பண்டுவா? ஒண்டி ஒரியா அவளால சம்சாரத்த சுதாரிக்க முடியுமா? செட்டாளுங்க ஆளாளுக்கு கூடி கூடி நாயம்பேசி குசலஞ்சொல்லி அவளுக்கு உடுக்கயடிக்க. "உன்னையொரு பெரிய மனுசன் , வாத்தியாருன்னு நம்பி செட்டு மத்தாளத்துக்கு வுட்டா, எம்பிருசனுக்கும் அந்தப்பொட்டையனுக்கும் வெளக்கு புடிச்சி, என்ற வேரப்பறிச்சி,வெந்தண்ணி வாக்கிற , பரவால்லடா மாப்ளே உன்ற பண்ணாட்டுன்னு" ராசுப்பொண்டாட்டி வந்து பேயாடிப்புட்டு போனா.அல்லாருக்கும் எட்டெழுத்து, நம்புளுக்கு பத்தெழுத்துலே அலே பறமுண்ட! என்னா பாவம் பண்டினமோ ஆணுக்காவாம், பொண்ணுக்கும் ஆவாம, இந்த மானங்கெட்ட பொறப்பெடுத்து, போற வாரப்பக்கமெல்லாஞ் சின்னப்பட்டு சீரழியுறோம்.


ஒருக்குத்தமும் பண்டாதமின்னியே நம்பள தேவியாப்பட்டங்கட்டி பல்லுமேல
நாக்குப்போட்டு மந்தைங்க பலவெதமாப் பேசுதுங்க. எச்செலைக்கி வீங்கறப்பொழப்ப
இன்னையோட தல முழுவிடி ஆயான்னு உள்ள நாயத்த நானு எடுத்துச் சொல்ல , வாத்தியாரும் ரெண்டு நல்ல பித்தி சொன்னாரு. சரீன்னு அபிராமியும் கம்மின்னிருந்தா ராசு வழிக்கிப் போகாம , ஆடி நோம்பிக்கிக் கூத்தாட தேவுரு செட்டிப்பட்டிக்கி போனாம்பாரு அங்கவொரு எத்துக்காரவன் வந்துச் சேந்தான் அவளுக்கு எமனா. களரிக்கூட்டுமிந்தியே வந்தவம்பா! விடிய விடிய சுத்தி விடிஞ்சும் அபிராமிய வுட்டு அந்தல்ல நவுரல. இவ என்றான்ன அவஞ்சொல்ற பாட்ட பாடுறா, அந்த பாட்டுக்கு பதினஞ்சி சீல மாத்றா ச்சும்மா பறந்து பறந்து ஆடுறாப்பா. அந்த திருவாத்தான் ஆளுமேல ஆளவுட்டு இவளுக்கு நோட்டு நோட்டு பின்னுக்குத்தறாஞ் சலிக்காம, எப்பிடியும் அன்னைக்கி அனாமுத்தா சேந்தது உரூவா ஏழ்நூத்தம்பதுக்கு மேலியே இருக்கும்.


அலங்காரம் முடிஞ்சிதும் எங்கடா பிள்ளயின்னு தொழாவுனா ரெண்டுபேரும்
எவத்தயிருக்காங்கன்னு ஒன்னுந்துப்பே இல்ல. அப்பறம் பாத்துக்க எந்த பிருசம்
பொண்டாட்டி அந்த மாதர ஒத்துமையா இருப்பாங்க ! அவிங்க திங்கிறதும் ஒரே வட்டிலு ,
படுக்கிறதும் ஒரே கட்டிலு.., ஒண்ணும் மண்ணா பொழங்கிட்டிருந்தாங்க! நாளாவ ஆவ
இந்தப்பிள்ளக்கி சுத்தமா நெப்புக்கெட்டுக்கிடுச்சி. மாப்ள பெரும கண்ண மூடிக்கிம்பிடி அஞ்சாறு அலங்காரத்துக்கு ஆளு வரல, கூத்து படு பாணி சாமியாரு கூப்புட்டு கண்டாற,கழுத,ங்கோயா, ங்கொம்மான்னு ரவுசுப்பண்டும் பிடி மாப்ளக்காரனுக்கு ச்செட்யான ரோசம் வந்துட்டது.
அவனப்பத்தி அனாவசியம்! அவனென்ன உன்ன அடிப்புடிங்கிறது? நானாச்சி வா உனக்கு
தனியா செட்டுக் கட்டித்தாரமின்னு. ஒரே ரெண்டு நாளயில ஆளுங்களுக்கு மூவாயிரம்
நாலாயிரம் மிம்பணங்கொடுத்து சாமியாரு செட்டக்கலச்சி தனிச்செட்டு
கட்டிக்குடுத்துட்டான்.


இந்த ஆடுகாலிப் போனவ, குருவுக்கிட்டவொரு வார்த்தச் சொல்லிப்புட்டு நல்ல
வாக்குசம் வாங்கிட்டுப் போவப்புடாதா? போடா பிலாக்கப்பையான்னு போவக்குள்ள
சாமியாரு குடுத்து வச்சிருந்த பொதுப்பணம் நாப்பதாயிரத்தையும் வாயிலப் போட்டுக்கிட்டுப் போயிட்டா. ஒரு கூத்தன்னைக்கி இந்த மனுசன் தண்ணிதாசனூர் அம்மங்கோயிலண்ட நின்னு,


"அடியே குருத்துரோகி ! எண்ணி வொரேவொரு வருசத்துக்குள்ள என்ற கும்பி பத்தறாப்பல பத்தியெரிஞ்சி போயிருவடின்னு" மண்ணவாரி வாரி தூத்தவாச்சொல்லுப் பலிச்சிட்டுது.அந்த ஆளிட்ட சாபனையோ! அடி நாளு தீவனையோ கவுண்டம்மவங்க கூட சோடிப் போட்டுக்கிட்டு அங்கயிங்க சுத்தி ஆட்டம் போட்டது பத்தாதுன்னு இந்த கடகெட்ட மூளி
அவனக்கூட்டிக்கிட்டு வூட்டுக்கேப் போயி கும்மாளம் போடறதா? அவிங்கம்மாக்காரி பாக்கிறவரிக்கும் பாத்துட்டு, 'எங்கித்தி பாமனையோ என்னு வவுத்துல வந்து பொறந்து இப்பிடி ஈனப்பானமில்லாம திரியற! நீதாம் புளுத்துச் சாவற! எங்கியாச்சும் கண்ணுக்கு மறப்பாப்போயி சாவு! இங்கேண்டி வூட்ட கந்தறப் பண்டற? கூடப்பொறந்த பொறப்பு ஒரு வயசிப்பிள்ள இருக்கற வூட்ல இந்த மாதர அக்குறும்புல அழியறீங்களே நல்லாயிருப்பீங்களா?நாசமுத்து வேசமாரி போவிங்களான்னு ச்சும்மா வுட்டு வணக்கு வணக்குன்னு வணக்கி , கடதாம்பு கட்டும்பிடி கவுண்டம் மவன் போக்குவரத்து அறுதியா நிறுத்திக்கிட்டான். இவ மாப்ள வந்து
பாக்கறதல்லையின்னு அலைமோதி கெட்டலைஞ்சி சோறுதண்ணி கூட குடிக்காம கூத்துக்கு
போறது, வந்து கூதப்போட்டுக்கிட்டு படுத்துக்கறது. பங்கினி மாசம்
ச்செட்யானப்படிக்கி சீசனு! வருசக் கூத்தா வருது! வர்ற கூத்த வாண்டாங்கலாங்கமா?
போற இடத்திலேயெ தங்குமடம், போட்டுக் கூத்தாடிக்கிட்டு தப்படியா வூட்டுக்கு
வந்து போயிக்கிட்டிருந்தா.


அந்தப் பிரகாரம் பூலாம்பட்டி சித்தூருல நோம்பிக்கூத்து வொண்ணு தானாவதி* மழைக்கி நிக்கிம்படி வூட்டுக்கு போகவலாம்னு வந்தவ நட்ட நடு தாவாரத்திலியே
மாப்ளக்காரனும் அவ அம்மாக்காரியுங் கொண்டி மாட்டிக்கிட்டு கெடக்கறதப்
பாத்துருக்கறா. அப்பிடியே அங்கம் பதற, அடி வவுறுக்காந்த ச்சட்டங்குன்ன , ச்சரிகலம் பதற
நடுநடுங்க நின்னவ , " அடியே உத்தமபத்தினி எனக்கு பித்திச் சொன்னியே இப்ப
நீயேண்டி அவுசேரிப் போன" ன்னு ஒரேயொரு வார்த்தயின்னாலும் நாண்டுக்கிட்டுச்
சாவும்பிடி கேட்டுப்புட்டு, கடகடன்னு கண்ணுத்தண்ணிய வுட்டுப்புட்டு அந்தாண்ட
வந்துட்டா.அவ்வளதான் மக்யாவது வாரமெல்லாம் பன்னிக்கறிய வறுத்து அதல பாசானத்த கலந்துக் குடுத்து அபிராமிய கொன்னுப்புட்டா அவிங்கம்மாக்காரி. நெருப்பூரு நாவமரைக்கி சீருக்குப் போயிட்டு தகோலு தெரிஞ்சி வரதுக்குள்ள எடுத்துக்கொண்டி எரிச்சுப்புட்டாங்க, எளம்பிள்ளி கூடுகாட்ல மவ மூஞ்சியப்பாக்க கூட ரொணமில்ல . ஆவுசந் தாங்காம குழிமேட்டுக்குப் போயி சாம்பல நவ்வாலு வாயி அள்ளித் தின்னுப்புட்டு வந்தம்.
நாங்க ஆருக்கு என்னா தீம்புச் செஞ்சம்? தாயப் பழிச்சமா? தண்ணியத் தடுத்தமா? ஏழய அடிச்சமா? எளஞ்சாதம் உண்டமா? எனத்துக்கிந்த ஆண்டவனுக்கு எங்கமேல இத்தன கூரியம்? கூனுக்குருடு , மொண்டி , மொடம், இப்பிடி ஒடம்புலவொரு ஒச்சமின்னாக்கூட மயிராச்சி, அதப்பத்தி காரியமில்ல. பாழாப்போன பொறப்புல கோளாறுபண்டி வேடிக்கப் பாக்குதேயந்த நொள்ளக்கண்ணு சாமி ! அபிராமிபுள்ளய நெனச்சிட்டம்னா அன்ன பொழுதுக்கும் அன்னந்தண்ணி ஆகாரம் எதுவுமே உள்ற எறங்காது. நாம்ப அழுதகண்ணுஞ் சிந்தன மூக்குமாயிருந்தா மாண்டவிங்க பொழைக்கப் போறாங்களா? மறிச்சி மண்ணவுட்டு மேல வரப்போறாங்களா ? இல்ல அன்னைகியெழுதன எழுத்த பிரம்மன் அழிச்சி எழுதப்போறானா?
உச்சியத்தாண்டி ஒருமாறுப் பொழுதாச்சி சம்பளம் பிரிக்க. செங்க முனியப்பங்
கோயில்ல எறங்கி பொடு பொடுன்னு வூட்டுக்கு போயி, துணிமணிய அலசிப்போட்டுட்டு
ஒருவாச்சோத்த குடிச்சதும் களப்பாயிருக்குதேன்னு செத்த படுத்தம்பாரு ,
எந்திரிக்கும் போது மணி ஏழு!


எஸ்.டூ.எ பஸ்சு சங்கிரி வந்துட்டு திலும்பி பவானி போயிரிச்சு. அதும்பொறவு ஆதியா பாதியா கெளம்பி அம்மாபேட்ட வாரதுக்குள்ள மணி ஒம்போதர, அலங்கார கறவதானுங்க ஒருத்தங்கூட வூட்ல இல்ல. எட்டு மணி முட்டும் பாத்துட்டு மினி வண்டி பேசி
எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்களாம். வூடு வூடா அவிங்களத் தொழாவிப் புட்டு
வரதுக்குள்ள பத்துமணி கடைசி பஸ்சும் போயிட்டுது. பக்கமாயிருந்தாலுந் தேவல. நாகனூரு வாத்தியாரூட்டு கூத்து. மெயினு ரோட்லேயிருந்து பழையூரு. முழியனூரு மேல நடந்துப்போனா ஏழு மைலுக்கும் மேல சேரும். எந்நேரம் போறது? நேரங்காலமா வந்திருந்தா எதாவொரு வண்டி கிண்டி புடிச்சிப்போயிருக்கலாம். அத்துவானத்துல* வந்து மாட்டிக்கிட்டமே என்னாப் பண்டறது? செட்ல சாரி வேசமே இல்ல. அந்த சிறுத்த கண்ணஞ் சேவுருப்பையன் இப்பதான் புதுப்பழக்கம், சந்து அடைக்கத் தானாவும் , பெருங்கொண்ட ஆக்கிட்டு
கட்டிச்செலுத்த மாண்டான். மிந்தியாச்சும் சுப்ரமணி இருந்தாப்ல,பொண்ணு வேசத்துக்கு பஞ்சமில்ல. போனப்பூட்டிலேயே ஆளு அலங்காரத்துக்கு வரல. அவரென்ணாப் பண்டுவாரு? பத்திருவது வருசமா செட்டுக்கு அவரு பட்ட பாடு அந்த பஞ்சும் பட்டிருக்காது. அப்பிடி ஒழைச்ச ஒழப்புக்கு கைமேல கண்ட பலனா இன்னிக்கி ஒவித்திரியப்பட்டிக்கிட்டுக் கெடக்கறாரு.
குஞ்சாண்டியூருக்கு அந்தாண்ட ஆண்டிக்கர காக்காயந்தெருவுக்கு ஓராட்டத்துப்
போயிருந்தம். மூணாம் வருசம் கூம்புக்கு கூத்துவிட்டவங்க வக்ரகேது பலிதான்
ஆடனுமின்னுப்புட்டாங்க. எந்த அலங்காரமாயிருந்தாலுஞ்செரி சுப்ரமணி எத்து
வரிசையாதான் தொழிலுப்பண்டுவாரு. அன்னைக்கிம் அவரு விலோச்சனா வேசம்
போட்டுருந்தாரு.


அம்மாபேட்ட கணேசண்ணன் எரிகண்டங்கட்டியிருந்தாரு. வேகாத திரேகமும், போவாத உசுரும், நீங்காத சேம்பரமும் வேணுமின்னு வரம் வாங்க எரிகண்டன் வக்ரகேதுவ
ரணகாளிக்கி பலி குடுக்க கூட்டிப்போறான், மவன் உசுர மாய்க்க வேண்டாமின்னு
விலோச்சனா அழுது பொலம்பறா. மின்ன வச்ச கால பின்ன வெக்க மாண்டேன்னு
சூரனொருபக்கம் இழுக்க, வுடமாட்டேன்னு பொண்டாட்டி குறுக்க விழுந்து தடுக்க,
ஓரியாட்டத்தில சூர வேசக்காரன் அவள எட்டி ஒதச்சி தள்ளி அந்தாண்ட தாட்டி
போவனில்ல, அந்த கட்டத்தல கணேசன் ஒதச்ச ஒதயில ஏமாந்தாப்பிடி அழுதுக்கிட்டிருந்த
சுப்ரமணி முதுவுல ஈடுதாங்கி போச்சி. சும்மா ரெண்டு நாளு மூச்சுத்தப்பு
உழுந்ததுதான் காரணம், பொறவு மனுசன் வாயத்தொறந்து பாட முடியல. எங்கியங்கியோ போயி அளவத்த பணம் செலவு பண்டியும் நோவு நல்லாவல. பொறிக்கித் திங்கிற கோழிக்கி
மூக்கத் தறிச்சாப்ல . நல்ல தொழிலாளிக்கு நேந்த கதியப்பாரு. வவுத்துப்
பாட்டுக்கு இப்ப ஊரு வூரா ஈயம் பூசிக்கிட்டு திரியறாரு.


அவருமில்ல, நானும் போவலைன்ன கனகராசி வாத்தியாரு கொஞ்சத்தப் பேச்சா பேசுவாரு. கெடயில காலு தங்காம அங்கயும் இங்கயும் ஏண்டா காலந்திரியா திரியற? செட்டுக்கே வந்துர்றா! ஆத்தர அவரசத்துக்கு வேணுமின்னா பணங் கிணம் வாங்கிக்குவியாம்னு
அவருதாம் பொணையாயிருந்து ஆபரேசம் பண்ட செட்டு பணத்திலியிருந்து எட்டாயிரம்
தாரமின்னு சொல்லி மிம்பணம் மூவாயிரத்த கையோட குடுத்தாரு.
ஆச்சி , ஆச்சி இந்த எட்டு பூர்த்தியா ஆடனா வேணுங்கற பணந்தெரண்டுக்கும், ராய
வேலூருலியே டாக்கிட்ருமாருங்க கைபோடராங்களாம். நோவு இல்லாம போயி செஞ்சிக்கிட்டு
வந்துர்லாம் நிம்மிதியா!


கல்பனா ஆயா கூட முடிஞ்சத தாரமின்னிருக்குது. எப்பிடி பாத்தாலும் போவ வர
மேஞ்செலவு ஆயாப்பாத்துக்குவா. ஆசுபத்திரி சமாச்சாரம் செலவு இவ்ளவுதான்
ஆவுமின்னு ஆரு கண்டது ? முன்ன பின்னக்கூட ஆவும். எதுக்கும் உண்டுன்னா
காசிருந்தா ஒதாரணைக்கி ஆவுமின்னுதான் நானு கரவாட்டத்துக்கும் கூத்துக்குங்
கைகுடுத்துட்டு இப்படி பட்டழியறன். கனகராசிச் சமாவையுஞ் சும்மாச் சொல்லக்கூடாது. மனசர காங்காம ஏவிடியம் பேசுவாங்களோ என்னமோ தெரியாது. கண்டவொரு நாளும் எச்சி எடுப்பு பேசனதில்ல. நாலுப்பேத்து தொழிலு நம்பளப் பத்தி வாதிக்கக்கூடாது. ரோட்டுக்கால்ல நின்னு பால மாதர பொந்தியப்போட்டு ஒழப்பிக்கிட்டு போறவர ஒண்ணுரெண்டு வண்டிங்கள
நாங்குறுக்காட்ட ஒருத்தங்கூட நிக்கல.


நேரம் எந்நேரமோ அம்மாபேட்ட ஊரே அடங்கிப்போச்சி. வவுநேரங்கழிச்சி தொலையா ஆரோவொரு ஆளு வாட்டச்சாட்டமா நடமாடற மாதர தெம்பட்டது. ஆராயிருந்தா நமக்கென்னா? கூத்துக்கு போவ முடியாத வெசனத்துல எம்பாட்ல நானிருக்க, கிட்ட வரச்சொல்லி அவங்கைச்சாட பண்றானே! இதென்றா தும்பமின்னு பக்கம் போயிப்பாத்தா அவனெங்கியோவொரு போலிசு ஏட்டு. சிப்பமோ சீமச்சரக்கோ என்னான்னுந் தெரில. ஆளுக்குப் பதமான போத. சீப்பு வண்டிமேல அட்னகாலுப் போட்டு படுத்திக்கிட்டிருந்தாஞ் சிவரெட்டுப் பத்தவெச்சிக்கிட்டு என்னாங்க கூப்ட்டதுன்னு நாங்கேக்க எடுத்த எடுப்பில " வர்றீயா" ங்கறானே ஒரு துடியா. தடி எடுக்கறப்பவே அடி எங்க வுழுமின்னு எனக்கா தெரியாது.இருந்தாலும் நம்மள வெச்சி தெரிஞ்சி கூப்டறானா? தெரியாம கூப்டறானான்னு அறிக்கொழப்பம்! எப்பிடியோ இருந்து சாட்டாவுது, இதுக்கு மேல்பட்டு நாங்கூத்துக்குப் போறது நெசமில்ல. வளச்சிக்கிட்ட்டு வூட்டுக்குப் போவலாமின்னாலும் பவானி வரிக்கும் காரு
இருக்கும். அந்தாண்ட வண்டியில்ல. பைபாஸ்ல போயி பொழுது விடியந்தின்னியும்
குந்தியிருக்கனும்.


அவுத்தப்போயி ஏப்பா அவுதிப்பட்டுக்கிட்டு கெடக்கனும்? இப்பிடிப்போயி சித்தங்
கூறியும் இவங்கிட்ட தடுமாறிப்புட்டு வந்தா என்னாக் கெட்டுப்போச்சி? இருந்தாப்பிடியிருந்து எனக்கு தெங்கற நெனப்பெடுத்துக்கிச்சு. ஆம்பிள தெரண்டு ஆளாளா ஒடனே கண்ணாலங் கார்த்தி , அவனுக்குண்டான குடும்பங்குட்டி உற்பத்தி ஆகுது. அப்பிடியதுக்கு வசிதிப்பத்தலைன்ன அததுக்குபொண்டுங்க இருக்கறாங்க அங்க போயி அம்பதுன்னும் நூறுன்னுங் கடஞ்சொல்லிக்கூட அறுப்பத் தீத்துக்கறாங்க. பொம்பள சமைஞ்சா பெத்தவிங்க கடம்பட்டு , ஒடம்பட்டு ஒருத்தங் கையில புடிச்சிக் குடுக்கறாங்க. அதுச் சுத்தப்படலியா , அவப்பாத்து துணிஞ்சா அவ பொச்சி பொறன ஆணாகப்பட்ட அத்தன சீவனுங்களும் காரோடத்து நாயி மாதர காசுங்கையுமா சுத்தறாங்க.


இந்த திக்கத்த ஆத்துமாவுக்கு ஊத்த ஒடம்புல பிப்பு எடுத்தா அதக்கண்டு ஆத்த
மருந்துண்டா? நம்பள அரிசின்னு அள்ளி பாப்பாருமில்ல , உமின்னு ஊதிப்பாப்பாருமில்ல்ல. பிரியப்பட்டு வலியினா வர்றங்கறவன ஏம்பா வாண்டானுச் சொல்லனுமின்னு நானு அவன அப்பிடிவுட்டுட்டு , இப்பிடி இந்தாண்ட வந்து ரோசனப்பண்டிக்கிருக்கவே, அவஞ்சீப்பு வண்டி ஆள ஓரங்கட்டி நிக்குது. வந்து ஏறுன்னு அவஞ்சொல்லுமிந்தி நானு மின்னித்தி சீட்டேறிக் குந்திக்கிட்டன். ஒரே அழுத்துல வண்டி எட்டிப் புடிச்சாப்பல கொடம்பையூரு கரட்டுக்கு வந்துட்டது. அடிக்கரட்ல வட்டப்பாறையும் பாழியுமா இருக்கும் பாரு ! அவுத்த வண்டிய
நிப்பாட்டினான், பாற மேல மழக்காயித்த விரிச்சுட்டுட்டு வண்டியிலந்து நாலஞ்சி
பொட்ணத்த எடுத்துப் பிரிச்சி வெச்சாம்பாரு ! எந்த சோத்துக்கடயில வாங்கனதோ!
கறிச்சோத்துப் பொட்ணமாயிட்டயிருக்குது வட்ட வாகறயே நெய்யி மணக்குது.
மூக்குல பருக்க வர தின்னுப்புட்டு எந்திரிச்சன். அன்னந்தினியும் வாயே பேசாமயிருந்தவன் " சரக்கு சாப்டுறியா" ன்னு ரெண்டு வெராந்தி பாட்லயும் எடுத்து மின்ன வெச்சான் ஏட்டு.அதயுஞ் சைசா மண்டயத்திருவி வாயில ஊத்திக்கிட்டன், வீக்கங்கண்ட வவுறு தூக்கங்கேட்டுது. அதோட அளவான போத, ஆடியாடி அலண்ட ஒடம்புக்கு தோதாயிருந்தது. குளுங்காத்துச் சிலுச்சிலுங்க, மேலுப்பசபசங்க எனக்கு ஏனா தொப்ளச்சுத்தி புரு புருங்குதே! அப்பிடியே கட்டயக் கீழச்சாச்சி கண்ண மூடனம்பாரு ஏட்டும் எம்மேல சாஞ்சான். சாவலு நல்ல பெருஞ்சாதி சாவலு. அணைய அணைய ஒணக்கையா இருந்திச்சி., இப்பிடியே கதய ஒப்பேத்தி ஓட்டி, கூத்த கொண்டயத்துக்கு கொண்டு போயி மங்களம் பாடிப்புடலாமின்னு நாங்கெனாக் கண்ட மாயத்துல , மின்னாம மொழங்காம எண்ணத்துல இடி எறங்குதே! ஏப்பா உரியேறன சாத்ரீகப் பூன தயிரிருக்க சட்டிய எத்தன நேரம் நக்கும்? வெறியெடுத்து ஆவு ஆவுன்னு என்ற அடிமடிய தொழனவனுக்கு ஆட்டு ஒதப்பையாட்டம் எம்புடுக்குச் சிக்கும்பிடி அவம் மொவற நறவல்ல கையுட்டாப்ல சுண்டிப்போச்சி. "த்தூ"ன்னு காறித்துப்புனவங் காது காதா அப்பறாஞ் சடையாம.ஓரடியா? ரெண்டடியா ? " அய்யோ சாமி நானு அறியாத பித்தியில தெரியாம தப்பு பண்டிப்புட்டன். வுட்று சாமி நானு ஓடிப்பொழச்சிக்கிறன்னு அழுது பரிதவிங்கறன். அவங்காலப் புடிச்சிக் கெஞ்சறன். அவங்காய காதறந்த மேல ஓக்க ! அதயெதயுங்காதுல போட்டுக்கவேயில்ல. " மி யெம்மா பூக்குல தெங்கோ! ஓரி திக்கர நீ பணியின காமிச்சேவு"ன்னு மயித்த வளச்சிப்போட்டு சும்மா குப்பு குப்புன்னு குப்பி ,
என்னய மிங்கட்டு பிங்கட்டு கட்டி சீப்பு வண்டியீல தூக்கிப்போட்டு கண்ணாடியச்
சாத்தி , கதவுசந்துல எங்காலு ரெண்டையும் வெளியே இழுத்து , ஓரட்டாங்கையில
புடுச்சிக்கிட்டான்.


சோத்தாங்கையில அடிப்போன பூணோட அத்தச்சோட்டு குண்டாந்தடிய புடிச்சி,
எல்லப்பன்னிய குத்தறாப்போல என்ற உசுரு நெலயில ஒரேக்குத்து! ஆண்டவங்குடுத்த அந்த
ஆதார பொருளு கொழண்டு கலங்கிப்போச்சு. இன்னும் நாலீடுப் போட்டு அப்பையே
அடிச்சிக்கொன்னிருந்தா ஆயிருக்கும் வத வதயான வதப்பண்டி , வாய்க்கா கரையில
வாரிச் சூறையிட்டுப்புட்டு போயிட்டான்.ராவெல்லாம் எங்க கெடந்தன் ? எப்பிடி பூதப்பாடி வந்தன் ? ஆருக்கொண்டாந்து ஆயாவூட்ல போட்டது ஒரு பிருவுந்தெரில. நாம் பொழச்சது மாதா புண்ணியம் ! மறுசென்மம். " பொறப்படு ஆயா வேலூருக்கு, போயி டாக்டரிண்ட கைப்போட்டுக்கிட்ட்டு வந்தரலாமின்னு" கண்ணு முழிச்சதும் மொதக்காரியமா ஆயாளக்கூப்பிட்டு சொன்னேன்.......................


*அருஞ்சொற்பொருள்கள்:*


தெரட்டி = பூப்புனித நீராட்டு விழா
சொணையான் = சம்பளம்
வரிக்கல = வாங்கல
ஆட்டத்துக்கு = கரக்காட்டத்துக்கு
அலங்காரம் =தெருக்கூத்து
கூத =போதை
பொட்டைங்க = திருநங்கைகள்
தாயம்மா = திருநங்கைகளுக்கான உறுப்பு நீக்கும் சடங்கு செய்பவர்.
கைபோடுதல் = உறுப்பு நீக்கும் நிகழ்வு
கோத்தி = ஆண் உறுப்பு நீக்காமலே பெண் உணர்வுடன் வாழ்பவர்
ஆயாமாருங்க = திருநங்கைகளிடையே வழங்கும் உறவுமுறை
சேலாமாருங்க= மகள் உறவுமுறையினர்
பிந்தாயம்மா= திருநங்கைகளுக்கான உறுப்பு நீக்கும் சடங்கின் போது சம்பந்தப்பட்ட
திருநங்கையை பிடித்துக்கொள்பவர்
மானி/சுனி/புடுக்கு/குஞ்சி = ஆண்குறி
கப்பு போடுதல் = முகத்தில் உள்ள முடிகளை அகற்றுதல்
ஜோக்கேத்தி = பாவடை,சேலை முதலான பெண்கள் தரிக்கும் உடைகளையும் தோடு மூக்குத்தி
கொலுசு மெட்டி முதலான ஆபரணங்களையும் அணிவித்தல்
மோரி = குளிக்கும் அறை
காவு = புண்
தந்தா = திருநங்கைகள் புரியும் பாலியல் தொழில்
ரோனு = லோன் ( வங்கிக்கடன்)
பாணி = நிகழ்ச்சி தோல்வி
தானவதி மழை = பங்குனி மாதத்தில் பொழியும் உத்திரட்டாதி மழைக்கும் ரேவதி
மழைக்கும் இடையே எதிர்பாரது பெய்யும் மழை
சாரி வேசம் = பெண்வேடம்
வக்ரகேது பலி = ஒரு சிவபுராணக்கிளைக்கதை
சிப்பம் = பாக்கெட் சாராயம்
தெங்கிற = புணர்கிற

--

Saturday, November 7, 2009

பாதரவு

மு.ஹரிகிருஷ்ணன்


சத்திப்பையன் வெச்சிருந்தது மொத்தம் எம்பது உருவாப் பின்னுக்குத்துக்காசு, ஒருப்பொட்டலங் குருணமருந்தும் ரெண்டு பாட்லு கோட்டரும் வாங்கி, ஒண்ண அப்பயே மூடிய திருவி வாயில ஊத்திக்கிட்டான், இன்னோன்ன வூட்டுக்கு கொண்டி ஒடச்சி அதோட இந்த குருண மருந்தையுங் கலக்கிக் குடிச்சிப்புடலாமுன்னு திட்டம், பின்ன என்னாப்பின்ன? இன்ன மேட்டும் அந்த உசுர வெச்சிருந்து ஆவப்போறதென்னா? சொத்து அழிஞ்சாலுஞ் சொல்லு அழியக்கூடாது, காத்தால ஒரு பேச்சி,மறுக்க மத்தியானம் ஒரு பேச்சா?


ஒடமையின்னு அவங்கிட்ட இந்தது அது ரெண்டுதான், அதுவும் அவஞ்சம்பாரிச்சதில்ல, அடமானம் வந்தது, நகுலூரு சுப்பனது அரப்பவுனு மோதரம், சௌரந்தரங் கோமாளியிது வாஸ்சு! நாளைக்கி ஒருநாளு குறுக்க, மறாநாளு ரெண்டு பேருந்சம்பந்தி, எதுப்பொண்ணு கட்டிக்கிறது. இந்தநாலு வருசமாக் கூத்தாடி அவந்தொச்சமா வெச்சிருந்தது அந்த மூவராயிரம் உருவா மொள்ளதான். அன்னிக்கி இருந்த பசையில ஆத்தர அவசரத்துக்கு கேட்க றாங்கன்னு ஈடுமானம் வாங்கிக்கிட்டுத்தான். காசக் குடுத்தான், அதயே தொழுவாடாப் பண்ற வள்ளலுமயிரு அவனுக்கு தெரியாது, அவன் அப்பேருகந்த ஆளுமில்ல, பழவுன தோசத்துக்கு ஒரு ஒதாரண நெனைக்கப்போயி பங்கம் வந்துட்டது.


வாங்கனவிகளச் சொல்லிக் குத்தமில்ல. அவிங்க குடுத்த தெல்லாம் ஒரு நாலணாப் பாக்கியில்லாம திலிப்பிக் குடுத்துட்டாங்க, இவனேத்தான் இவந்தலயில தட்டப்பொருத்தி வெச்சிக்கிட்டான், இந்தப் பித்தியா வாத்தியாருமாருங்க இவனுக்குச் சொல்லிக் குடுத்தாங்க?
மொதமொத பொன்னான் வாத்தியாரிண்டதான் இவங்கூத்துப் படிச்சது, கொன்னவாயனாக் கெடந்தவன வாய்கூட்டிப் பேச வெச்சி, பாட்டும், அடவுஞ் சொல்லிக் குடுத்தது அந்தப் புண்ணியவாந்தான்.! மவராசன குளுந்த நேரத்துல நெனைக்கனும்.! ராவுல கும்புட்டுட்டுப் படுக்கணும்.! என்னா அந்தாளுக்கிட்ட ஒருசிக்கலுன்னா எதயுத் திருத்தமாச் செய்யணும், இல்லையின்னா அவன் எதுப்புற நிக்க முடியாது. என்னாப் பண்டுவான். ஏதுப்பண்டுவான்னு அவனுக்கே தெரியாது. ஒரெட்டு ஆருலுப்பட்டி ஏரிக்கி அந்தாட்ட வெள்ளக்கல்லுப்பட்டியில முனியப்பந்தெவத்துக்கு கூத்துவுட்ருந்தாங்க, நளதமயேந்திரிக் கண்ணாலம் நாடகம்.! பொன்னாவிக தம்பிக்காரன் மணிப்பையன், நளச்சக்கரவர்த்தி வேசம்போட்டுக்கிட்டு வெளிய போனவனுக்கு சவய அடக்கிப் பேசத்தெரியில. அவம்பாட்டுக்கு என்னென்னம்மோ ஔப்பரிச்சிக்கிட்டுக் கெடந்தான், பொன்னானுக்கு கோவம் ஒண்ணுந் தாக்குப்புடிக்க முடியல, வலப்பையில வெச்சிருந்த பொறந்தவன் வேட்டிய எடுத்து ஒருப்பாட்டுக்கு ஒருக்க,
“கிழிஞ்சிப்போச்சிப்போ
கிழிஞ்சிப்போச்சிப்போ”!ன்னு
ஒருச்சாணுத்துணி மிச்சமில்லாம நூலு நூலாக் கிழிச்சியெஞ்சிப்புட்டான். விடிஞ்சி மணிப்பையன் முண்டக்கட்டயோட ஊரு மூப்பமூட்ல போயி பழைய வேட்டி வாங்கி கட்டிக்கிட்டு ஊடுபோயிச் சேந்தான்.
இன்னோரெட்டு, பக்க நாட்டுச் செட்டுக்கு ஆளுப்பத்தலைன்னு பொன்னானும். அவம்பங்காளி பெரிய கூவானும் போயிந்தாங்க, கொழலுல கூவாம் பேரேடுத்த ஆளு! அபி மன்னஞ்சண்டயோ, அர்ச்சுனந் தேவப்பட்டமோ அதென்னமோவொரு அலங்காரம் வெச்சிருந்தாங்க, பொன்னானுக்கு விடியாலம் வேசம், சேரிச் செத்தபடுத்துக் கண்ணசரலாமுன்னு டேசிக்கிப்பொறன படுதாவ விரிச்சுட்டு படுத்துக்கிட்டிருந்தான். பக்கநாட்டுச் செட்டுல ஆனையப்பன் ஆனையப்பன்னு ஒரு படயாச்சி பொண்ணு வேசக்காரன், அவனொரு சனஞ்சேராத நாயி! பொறத்தியாருன்னா அவனுக்கு பேண்ட பீய திலிம்பிப்பாத்தாப்பல ஓக்காளம், தானுங்கற கெவுரத்தி.


“சீருடன் தொண்டர் நாவில்
செழித்து வளர்பவளே போற்றி!
நாரணன் ஈன்றெடுத்த நான்முகன்
தேவியாளே!
சரஸ்வதி சாரதாம்பா உன்
தாழ்வினை போற்றி! போற்றி! ன்னு”


மூணடி விருத்தத்த முழுசாப் போடல, ஆனையப்பந் தொண்ட பொட்டிய அப்பிடியே கண்ணாப்பின்னான்னு கலைச்சது, மும்பாட்டு பணிக்கில்லையின்னா பிம்பாட்டுத்தான அத நேந்து நெரவுணும். கூவான் நெட்டா ஒரு அகவலு ஊத, உள்றயிருந்த ஆனையப்பன்.
“ஆர்ராவங் ங்கோயா பரதேசிப் புண்டமேல ஒக்க! என்றா கொழலு ஊதற, புண்டக்கொழலு? எங்கயிருந்துடா வர்றீங்க பறத்தாயாலிங்களா எம்பட தாலியறுக்க? அப்பிடியிப்பிடின்னு இன்னும் என்னனென்னம்மோ எச்சா வார்த்த பேசும்பிடி பொறனப் படுத்திருந்த பொன்னானுக்கு ஒவ்வொருச் சொல்லும் இந்த அல்லையிலக் குத்தி அந்த அல்லையில வருது, பின்ன என்னாப்பின்ன தானாடலையின்னாலும் தஞ்சரிகலம் ஆடாதா? எப்பேருகந்த தொழிலாளி? என்னா சேதி? வையகத்துல அவன பழிக்க ஆளுண்டா? குசல நாடகத்துல


சாமியும் வந்தாரா
சண்டைகள் செய்தாரா?
அனுமந்தப் பாலா ன்னு


அவன் ஊதறானே அந்த ஒருப்பாட்டுக்கு ஈடாவானா?இந்த ங்கொக்காளவோலி!
அவங்கால்ல ஒட்ன தூசி! இவனுக்குப்பாருவொரு மண்டக்கணத்த இருக்கட்டுண்டா ஒறக்கழுட்டிமாப்ள!
விடியறதுக்குள்ள உன்ன சின்னம் பண்ணலைன்னா ங்கப்பனுக்கே நாம் பொறக்கலைடான்னு மனசுல வெச்சிருந்தாம் பொன்னான்.
ஆனையப்பங் கழதயாட்டங் குதிச்சிப்புட்டு தர்பார முடிச்சிக்கிட்டு உள்ற வந்தான். மண்டையச் சுத்தி வழிச்சாலும் அவந்தலையில ஒரே மூணு மசுருச் சிக்காது. அக்கியானம் புடிச்சவன், ரெண்டடி சவுரி நால ஓட்டுக்கா வரிஞ்சி அதயே பூவு கீவெல்லாஞ் சிங்காரிச்சி நெத்தியோடச் சேத்தி சடையாட்டங் கட்டிக்கிவான். குதிக்கற முட்டுங் குதிச்சிப் புட்டு வந்து அத அவுத்து வெச்சிருவான்.
அன்னிக்கும் வந்தவன் மசுத்த தளத்தி பட்டிக்குச்சியிலக் கட்டிப்புட்டு வேசம் போட்டுக்கிட்டிருந்த சீனாங்கிட்ட பீடி வாங்கி பத்த வெச்சிக்கிட்டுக் குந்தியிருந்தான்.
மொழங்காலு குழி பொறிச்ச பொன்னான்,அலுங்காம அத அவுத்து குழிக்குள்ற போட்டு மண்ணத்தள்ளி மூடி,மேல படலப் பிரிச்சிப்போட்டு படுத்துக்கிட்டான், நாயம்பேசற முசுவுல ஆனையப்பனும் இதயெதயுங் கண்டுக்கல, அவஞ்சாயிண்டு வேசக்காரன் குஞ்சிப்பையன் தர்பாரு ஆவும்போதுதா எந்திரிச்சி சடயப் பார்த்தான், அது கட்ன தாவுல இல்ல.
“ஆயா ங்கொம்மா" ன்னு
பேசிக்கிட்டு தொழாவு, தொழாவுன்னு தொழாவுனா எங்கப்போயி அதுச் சிக்கப் போவுது? முடி இல்லாம மொட்டத்தலயோட எப்பிடி சவைக்கி வாறது? இவன் வேசத்த பொது வசனமாப் பேசி சரிக்கட்டிக்கிட்டாங் கு ஞ்சிப்பையன். இருந்தாலும் விடியாலம் ஒரு வேசம் வரவேயில்லைன்னு நூறு உருவாச் சொனயான ஆட்டமுட்டவங்க பாணிப்பண்டிப்புட்டாங்க.
அப்பேருகந்த ருஸ்தமான வாத்தியாரிண்ட வித்த கத்து என்னாப் பிரயோசனம்.?
அப்பறம்,
சிறுசுப் பெருசாச்சி, செட்டுங் கந்தறயாச்சி. பொன்னாங் கூப்புட்டுச் சொல்லிப்புட்டான்.
“அடே அடே சத்திப்பையா! இதப்பார்ராச் சாமி, உனக்கு பொழைக்க தடங்காட்டியுட்டுட்டன். நீயிப்போயி நெனப்பா பொழைச்சிக்கடாப்பா, இந்தச் செட்டயும். உங்களையும் கட்டி மாரடிச்சிக்கிட்டிருந்தா எம்பொண்டாட்டிப் பிள்ளைங்க கஞ்சிக்சிச் செத்து வீணாப் போயிருவாங்கடாப்பா”ன்னு.
கோழி, குஞ்சப் பிரிக்கறாப்பல பிரிச்சுட்டு அவரு கூப்புட்டப்பக்கம் கூத்துக்குப் போவ,,,,
சத்திப்பையன் அங்கயிருந்து எடப்பாடிக்கிப் போயி பொன்னியூட்டு மண்டயங்கிட்டச் சேந்தான், மண்டயன் ராவுலக் கூத்தாடி, பவல்ல சந்தப் பீச்சாண்டி.!
மொவங்கழுவி கண்ணாடிய எடுத்து, மின்ன வெச்சி வேசம் போட ஆரம்பிச்சா, அந்தக் கூறுமுஞ்சி காட்ற சேட்டைக்கிப் பயந்தே முக்காவாசிப்பேரு அந்த செட்லயிருந்து ஓட்டம் புடிச்சிருக்கறாங்க. நாயம் அநியாயங்கறது அவந்தலக் கட்டுக்கே தெரியாது, எல்லாந் சுதாரிச்சியிருந்தா எதோ ரெண்டு விசியஞ் தெரிஞ்சிக்கலாம்.
பேயிக்கி தாலிக்கட்னப்பொறவு சுடுகாட்டுக்கு பயந்தென்னா ஆவப்போவுது ? இவம் பாவம் படாத நிமுசுப் பட்டுக்கிட்டு அவனே கெதியின்னுக்கெடந்தான், மண்டயனுக்கு ஒரு கூத்தியா கந்தாயி, கந்தாயின்னு அவனோடவே இருந்தா கூத்தாடிக்கிட்டு. குஞ்சாம் பாளையத்துல ஒரு ஆட்டத்தன்னிக்கி சத்திப்பையந் தல கழுவிக்கிட்டு வந்துருந்தான்.
மைப்பந்துப்போட்டு ஊற வெச்ச எண்ணயப்பூசி பூசி அவனுக்கு மொழங்காலுமுட்லும் மசுரு, என்னதாஞ் சிக்கெடுத்துச் சீருப்பாத்தாலும் முடிஞ்சக்கொண்டய அவுத்தா அதோட மல்லுக்கட்டிதாம் படியவெக்கணும்!. வாக்கு அவ்வளச் சீக்கரம் பிரியாது. இவம்பாவம் கவடத்து
"கந்தாயிக்கா, கந்தாயிக்கா! இந்த தலயச் சித்த நேரெடுத்து ரெட்டச்சடப் போட்டுவுடுக்கா” ன்னு
கேக்க, அவளும் பாவஞ் சூதுவாது தெரியாம வாடா தம்பியின்னு ஒக்காரவெச்சி பெரும்பல்லுல நெவு நெவுன்னுச் சீவி ரெட்டச்சடப் பின்னிவுட்டா.
அன்னமுட்டும் மண்டயன் அவள நோட்டம் பாக்கறது ,பையன நோட்டம் பாக்கறது, வேசம் போடறதுன்னு கொறவனாட்டங் குந்தியிருந்தான். சத்திப்பையன் எந்திரிச்சி சீலயக்கட்டி சலங்காயக் கையிலெடுத்து,சாமிய வருந்தி கால்லச் சுத்திமுடிப்போட்டுக்கிட்டு, அரினனா,,,னா.ன்னு ராகம் போட்டான், கிடீர்னு ஒரு வொத கந்தாயிப்பிள்ள அல்ல வவுத்தக்கட்டி வுழுந்ததுப் பாரு, வடக்கத்தி படலோட அய்யோ யெஜ்ஜான்னு பொம்பள புழுதிக்காட்லப் போயி வுழுந்தா.
"ஏண்டி தேவிடியா! கொண்டவங் கொடுங்கையில, கொள்ளாதவன் உனக்கு மாரு மேலயாடி"ன்னு
மண்டயன் மூக்குல புளுத்துப்போயிக் கேக்க, சத்திப்பையன் நெட்டா அவங்காலடியில வுழுந்து
“அய்யோ வாத்தியாரே தப்பித் தவறிக்கூட உன்னு வாயால அப்பிடிச் சொல்லாத வாத்தியாரே அந்த தாயி ங்கம்மாளோட ஒணணு வாத்தியாரே”ன்னு
கெஞ்சிகெதர்றான்.
“ஏண்டா ங்கோயாலோக்க மொளச்சி மூணெலவுடல அதுக்குள்ள கூத்தியாச் சேத்தறயா கூத்தியா" ன்னு
வுட்டாம் பொத்துன்னு அவனுக்கு ஒருவொத! தெக்கித்திப்படலோட அவனும் புழுதிக்காட்ல போயிவுழுந்தான், வொதயத் தின்னுப்புட்டு என்னம்மோச் செரிக்கட்டி பொழுத ஒட்டி கதய முடிச்சி மங்கலம் பாடனாங்க. விடிஞ்சது, வேசத்த அழிச்சிப்புட்டு இவம்போறதுக்குள்ள மண்டயன் பைட்டேண்டு மோரிமேல தலகிழுதா கெடந்தாங் குடிச்சிப்புட்டு.
"வாத்தியாரே சம்பளம் வாத்தியாரே"ன்னு
பையங்கேட்க அந்த ஒணவு கெட்டவன் துள்ளிக் குதிச்செந்திரிச்சி,
"டே செட்டுக்கு வந்தமா குடுத்த வேசங்கட்டி ஆடனமான்னு உன்றச்சோலி மசுர பாத்துக்கிட்டுப் போயிக்கிட்டேயிருக்கனும், சம்பளங் கேக்கறப்பாரு, இந்தவொரு வேலப்புண்ட மட்லும் எங்கிட்ட வெச்சிக்காத"ன்னுப்புட்டு
திலுப்பியுங் குப்புற அடிச்சிப்படுத்துக்கிட்டாம் போதயில, என்னமுட்டும் நின்னுக்கிட்டிருக்கறது? பொட்டியத் தூக்கி தலமேல வெச்சிக்கிட்டு பதனெட்டு மைலு நடந்தேப்போயி வூடுச் சேந்தான்,
மண்டயங்கிட்ட சின்னப்பட்டு சீரழிஞ்சி ஒண்ணும் மோசம் போவல, ஒரு நல்லகாலம் பொறந்தது, மணிப்பையம் மறுக்கவுஞ் செட்டுக் கட்டனான், சத்திப்பையன் நாயா பேயா ஒழைச்சான், உருப்பிடியா தொழிலச் செஞ்சான், நாலுபேரு பரவால்ல சத்திப்பையன் வேசம் நல்லயிருக்குதுங்கற ரெவலுக்கு வந்தான், பொறவு சத்திப்பையன் இல்லையின்னா ஆட்டம் நெறக்காதுங்கற அளவுக்கு ஆச்சி, அவங்கையில ஒரு நூறு எரநூறு பொழக்காட்டம் போட்டது, அப்பறம் பாத்துக்க மாப்ளைக்கி கொம்பு மொளச்சிட்டுது, அறுப்புக்காலத்துல பெருக்கானுக்கு ஆறேழு கூத்தியாருன்னு சும்மாவாச் சொன்னாங்க?
பண்ணாடிக்கி போனபக்கம் பொண்டுங்க தொடுப்பு! பொழுது விடிஞ்சாலும் நழிச்சலு, கூட சீசாத்தண்ணீயும் போட பழவிக்கிட்டான், என்னம்மோ ங்காயா மேச்சேரி பத்ரக்காளி மொவம் முழிச்சி அவஞ்சாரீரத்த கெடுத்து பொழப்பல மண்ணள்ளிப் போடாம வுட்டுவெச்சிருந்தா.
இந்தக்கத இப்பிடியிருக்க.
சத்திப்பையனோட வீரப்பன் வீரப்பன்னு ஒரு குளுவன், அவனும் பொண்ணு வேசக¢காரஞ் செட்ல ஆடிக்கிட்டுயிருந்தான், பெருமைக்கிச் சொல்லல, தாயாலிக்கி கத்தியாட்டத்தொண்ட, முடிஞ்ச மட்லும் அவனும்பாவம் செட்டுக்குப் பாடுபட்டான், பாஞ்சாலக் கொறவஞ்சி நாடகம் வெச்சி அதுல இவங்கொறத்தி வேசங்கட்டிக்கிட்டு
சத்தியதுரோபதைக்கி தருமதயாளரும் விடையளித்து
சித்தமுங்கலங்கிவாடி தயங்கியே இருக்கும்போது
பத்தினி ரூபம்மாறி பாலனை இடுப்பில் வைத்து
அத்திமாநகரம் நோக்கி அம்மனும் வருகின்றாளே!ன்னு
விருத்தம்போட்டு


பாஞ்சால குறவஞ்சி வந்தாளே- பாலனையேந்தி
பாஞ்சால குறவஞ்சி வந்தாளே
பாஞ்சால குறவஞ்சி வந்தாள் பார்த்தாவ- பாலனாயேந்தி
செஞ்சிபதியாளுமம்மன் சிரசினில் கூடைவைத்து
நினைத்தகுறி தானுரைக்க நீலவர்ண மாயவரே
நீரும் வந்துதவவேணும் நினைத்தக்குறி சொல்லவேணும்
அக்கினியில் வந்துதித்து ஐவருக்கும் தேவியாகி
அக்யாதவாசம் விட்டு அத்திபுரம் போகலானேன்
முத்துமணிரத்தினங்களால் முடைந்து கட்டும் கூடையேந்தி
மூடனிட வாசலுக்கு முறைசொல்லப் போறேன் சாமி
சண்முகனார் அளித்த சதிரான கூடையேந்தி
சண்டாளன் வாசலுக்கு தான்போக நீதியாச்சே
ஆயனே மலர்கண்ணா அண்ணா அவரவர்க்கு குறியுரைக்க
அத்திபுர வீதிவந்து அமர்ந்திருக்க வேண்டும் சுவாமி.
மாபாவி துரியராசன் மானபங்கஞ் செய்திருக்க
மடையனிட வாசலுக்கு மாதுபோக காலமாச்சே
வனமாய் வனங்கடந்து வந்தேன் இருண்டவனம்
அந்தவனந்தனிலே ஆயனே துணை வருவாய்-ன்னு


இந்தப்பாட்ட பாடிக்கிட்டு வெளிய வந்தான்னா அடேயெங்கப்பா அவங்கொறத்தி வேசத்த அடிச்சி ஆட இன்னொருத்தன் பொறந்துதான் வருணும்.மணிப்பையனும் மத்தாளக்காரன் பள்ளிப்பட்டி பெருமாளும் ஆளுங்க நெலவரத்தக்கண்டு செட்டுச் சம்பளத்த நேக்கா ஏப்பமுட ஆரம்பிச்சிக்கிட்டாங்க மூவாயிரஞ் சம்பளம் வாங்கனா ஆயிரந்தள்ளி ரெண்டாயிரம் போட்டுப் பிரிக்கிறது, ரெண்டாயிரஞ் சம்பளமின்னா உருவா ஆயிரந்தாங் கணக்கு, சத்திப்பையன் ஒருநாளு
“அடேய் நல்லவாயஞ் சம்பாரிக்கறத நாரவாயந் திங்கறாப்ல திங்கறிங்க. தின்னுத் தொலையிங்க, தூரந்தொலயா இருந்துப் பாவம் பத்து இருவது பஸ் சார்சுப் போட்டுக்கிட்டு வர்ரான் வீரப்பன். அவஞ்செலவுக்கு உண்டானத ஒரு அஞ்சிப்பத்து சேத்திக் குடுங்கடான்ன ததுதாம்ப்பா"....
“அடடா கூத்தாடிங்களே! பரவால்ல நல்ல நாயம் பேசிப் படிவிட்டீங்க. எங்களுக்கு தெரியாதாச் சம்பளம் பிரிக்க. குடுக்கறத்த வாங்கிக்கணும். கொலாய மூடிக்கிட்டு இருக்கணும், இதுதாஞ் செட்டு நடமொற! நாங்க வர்றவிங்கள வான்னுஞ் சொல்லல, போறவிங்கள வேண்டாமின்னுஞ் சொல்லல, இந்த சரோசாதேவியும் கே,ஆரு, விசியாவும் இல்லையின்னாச் செட்டு மாண்டாப் போவுது இல்ல பூன'கண்ண மூடிக்கிட்டா பூலோவம் இருண்டுப்போயிருமா?" ன்னு கீட்டகம் பேசும்பிடி சத்திப்பையன் விசுக்குனு கௌம்பி வூட்டுக்குத் திலும்பிக்கிட்டான், மறாவது நாளு கூத்து இவனும் வீரப்பனும் போவாம நின்னுப்போச்சி. மணிப்பையஞ் சைக்கிலு எடுத்துக்கிட்டு சத்திப்பையமூட்டுக்கே வந்துட்டான்.
“என்றாச் சத்தி இப்பிடி சல்லியம் பண்றாப்ல பண்டிப்புட்ட? நீ பேசி வாங்கன வெத்தலப்பாக்கு, ச்சாமிச்சாமியா இருப்பியாம், இன்னிக்கி ஒரு நாத்திரியும்வந்து ஆடிக்குடுத்துர்றா. இல்லன்னா ஊருக்கரவத்தானுங்க ஈட்டுக்குச் சிக்கிப்போயிரவமுடா”ன்னு
அவங்கிட்டயும் அங்கயிருந்தபொண்டு பிள்ளைங்ககிட்டயும் நாயஞ்சொல்லி அழுவாத கொடுமயா கூப்புட, இவனுஞ் சேரி சேரின்னு போனான். போயி வேசம்போட்டு ஆடனான், விடிஞ்சி பெருமாளே வந்து இவங்கிட்டப் பேச்சிக்குடுத்தான்.
“ஏண்டாச் சத்தி நீரடிச்சி நீரு வெலகுமாடா? அப்பிடி என்றாப்பா நாஞ்சொல்லப்புட்டன்னு உனக்கு பொணக்கு வந்திரிச்சி, என்னம்மோ ஒரு பெரியமனுசன் வௌயாட்டுக்குப் பேசனா அதப்போயி கூரியமா மனசல வெச்சிக்கிறதா”ன்னு
கொழையிறான். கொணாய்க்கிறாஞ்சும்மா, இவனும் தொலையிதுடான்னு இருக்க அன்னிக்கி திருப்பியும் உருவா அயிநூறத்தின்னுப்புட்டாங்க நெண்டுப்பேரும், இவனும் வீரப்பனும் ஒரே முடுவாச் செட்டுக்கு போறதில்லன்னு தீருமானம் பண்டிக்கிட்டாங்க.
ஆட்டத்துக்கு போவலையின்னாச் சோத்துக்கு ஆரு குடுப்பா? அதும்போவ ஆடனகாலும் அவுசாரி போனப் பொச்சும் சும்மாயிருக்குமா?
கெடயில காலுத் தங்காம நத்தமேடு குளுவவமூட்டாரோட நாளு ராத்திரிக் கூத்துக்குப் போனாஞ் சத்திப்பையன்.


ஆரு ஆரோ ஆடறாங்க! பல பட்டறயுங் கூத்தாடுது அடோ சாமீ! கூத்துக்குன்னுப் பொறந்தவிங்க குளுவமூடுதான் நண்டுச் சிண்டு குஞ்சி குளுவான்னு சிறுகால் மட்டத்துலயிருந்து பெருங்காலுமட்டம் மட்லும் எதலயும் பூந்து வந்துருதுங்க அதுங்கச் சமாச்சாரமே வேற.
அவிங்க எசைக்கும் இவனோட எசைக்கும் ஒண்ணும்ரைனு வரல, ஆனா எடங்கண்டு பேசி தடங்கண்டுப் போறது எப்பிடின்னு அவிங்கக்கிட்டப் படிச்சிக்கிட்டான் உன்னப்பாரு என்னப்பாருன்னு கெழுடு கிண்டுங்களப் பாத்துக்கிட்டு எத்தன நாளைக்கி ஊட்டுல குந்தியிருக்கறது, அதும்பொறவு தொரசங்கட்டி ஏகாபுரத்துச் சுப்ருண்டப் போயி எடஞ்சேந்தான் அலங்காரத்துக்கு.
சுப்புரு ஒத்த உருவாயாயிருந்தாலுந் சேரி இன்னொருத்தங் காசுக்கு ஆசப்பட மாண்டான் ஒலக அனுப்பவம் தெரிஞ்சவன் எடப்பாடி மகுடஞ்சாவடியக்கட்டி, கெழக்க சேலம், தெக்க ராமக்கல்லு ஒருக்கோடியா பேரு தெரிஞ்ச கூத்தாடி. கொணம் மணம் ஆட்டம் பாட்டமின்னு, அவஞ்சங்கிதியே தனி. கச்சிதமான தொழிலாளி, நெலக்கடயானப் பாட்டுக்காரன். பதனெட்டாம் போர்க்களம் வெச்சி இவந்துரியோதனங்கட்டி,


“பாராளுந் திறமையிலாப் பாவியானேன்
பஞ்சவர்மேல் போர்தொடுத்தே விருதாவானேன்
தூறாதமரம்போல வொண்டியானேன்
துணையிழந்த பேடதுபோல் தவிக்கும்பாவி
நாராசங்காச்சிவிட்ட பான்மை போலே
நடுநடுங்கி மெய் சிலிர்த்து துரியன்தானும்
பொறாமையுள்ள சகுனி சல்லியன் சூழப்
போர்களத்தைக் கண்டு குறைமேற்கொள்வானே”


ன்னு, விருத்தம் போட்டு,பொறவு
பாவி துரியன் வந்தனன் ரணகளத்தில்
துரோகி துரியன் வந்தனன் ரணகளத்தில்
பாவி துரியன் வந்தேன் பாராச் சமர்களத்தில்
ஒண்டிக்கி ஒண்டியானேன் ஒருமரத்தோப்பானேன்
சிந்தனையில்லாது சிறகிழந்த பட்சியானேன்
பாவி துரியன் வந்தனன் ரணகளத்தில்”


ன்னு, பாட்டுப்பாடி வெளிய வந்து, படுகளத்துல வீமங்கெதயில அடிப்பட்டு காலொடிஞ்சி சாவற முட்டும் அவனப்பாத்து அழுத கண்ணுச் சிறுத்துப் போயிரும். சுப்புரிண்டப் போனப்பொறவு பரவால்ல. நல்லச் சேம்பரம் வரும்பிடிக்கும் ஒண்ணும் பஞ்சமில்ல.
கண்ணுச் சாளேசுரத்த கெவுணிக்க கெதியில்லாம திண்னையக் காத்துக்கிட்டு கெடந்த அவிங்கப்பங் கருப்பன மதுர கண்ணாசுப்பத்திரிக்கி கூட்டிப்போயி ஆப்பரேசன் பண்டி கண்ணாடி மாட்டிவுட்டான். மூட்டு வலியின்னும் மொழங்காலு வலியின்னும் வருசக்கணக்கா நடயில்லாம பாயிக்கி தொணயாப் படுத்துக்கிட்டிருந்த அவங்காயா செவிடிய ஈரோட்டு எலும்பாசுபத்திரிக்கி கொண்டி வைத்தியம் பாத்தான். அவந்தாயி தங்கப் பொண்ணூட்டுப்பிள்ள வயிசிக்கி வந்திச்சி, அதுக்கு அரப்பவுனு தோடு மூக்கித்தி ஆயிரம் உருவாயிக்கிச் சீலத்துணி மணி பதனேழு தட்டு வரிசயோட புளியம்பட்டி பல்லனையும் ஒலகடம் பூவரசனையுங் கூட்டியாந்து நையாண்டி கரவ முட்டாட்டி தெரட்டிச் செஞ்சாஞ் செரீங்கறாப்பிடி.. வவானித் சித்தாத்துல ஒருப்பொண்ணப் பாத்து அவனும் ஒரு கண்ணாலங் கார்த்திச் செஞ்சிக்கிட்டான்,அரமணைக்கிவொரு ஆம்பளப்பையனையும்,ஒரம்பரைக்கிவொரு பொட்டப்பிள்ளயையும் பெத்துக்கிட்டான், ஏழப்பால பொழச்சிட்டுப் போவுதுன்னு ங்கெப்பன் மவராசன் எம்,சி,யாரு அவிகப்பனும் ஆயாளும் போயி சம்பாரிச்ச சொத்துல காலனிக்கட்டிக் குடுக்க, அதுக்கொரு அய்யாயரம் வாக்கரிசிப்போட்டு சொந்த வூடுங்கட்டிக்கிட்டான்.
இதெல்லாம் மூணு நாலு வருசத்திக்கி மிந்தின ராமாயணம் மகாபாரதம், சுத்தமா இந்த வருசமும், போன வருசமும் பையம் பட்ட சித்ரவத பகவானுக்குதாந் தெரியிம், நேத்து வந்தானாங்குடி அவந்தலயில வுழுந்திச்சாம் இடிங்கறாப்பிடி உள்ளங்காலு வெள்ள எலும்பு தேய ஓழைச்ச சம்பாரிச்சி கட்ன வூட்ல எண்ணி எட்டு மாசங்கூட இந்தப் பையன் இருந்துப்பொழைக்கல.
மேக்க அந்தியூருக்கு அந்தல்ல எழுதிய மரத்தய்யங்கோயிலுக்கு கூத்தாடிப்புட்டு கழுத்துமுட்டும் கவட்டான் வரிச்சிக்கிட்டு வந்து மப்புல அவம் மச்சாங்காரன கண்டாரக் கழுதயின்னு பேச அவனிருந்துகிட்டு “இதாப்பாரு கடவுளே! என்னம்மோ கெடந்துசாட்டாவுது, நம்ப தங்கச்சிப் பிருசன் நம்பதங்கச்சிப் பிருசன்னு இத்தன நாளா நானும் வெச்சிப்பாத்தன், இன்னமேட்டும் போதப்போட்டுக்கிட்டு வந்து ஒரு வயசிப்பிள்ளைங்க இருக்கற எடத்துல நேந்தப்பிடி கொச்ச கோளாறு பேசிக்கட்டு திரியற வேல நம்பளுக்குச் சுத்தப்படாது, மட்டு மரிகேதிய கெடுக்கறதுக்கு மின்ன வூட்டவுட்டு அந்தண்ட தாண்டிக்க”ன்னு ஒரேவார்த்தயிலச் சொல்லிப்புட்டாங் கறாரா.
வெத்து மேலுல ஈமிய்க்க துணிமணியில்லாமக் கெடந்தவன் சிவுக்குனு எந்திரிச்சி சிண்ட ஒதிறித் தட்டி முடிஞ்சிக்கிட்டு இடுப்புலயிருந்த ஒட்டுக்கோமணத்தோட அப்பனாத்தா பொண்டாட்டி பிள்ளைங்கள கூட்டிக்கிட்டு அம்மாபேட்டைக்கி வந்து, பரசத்தாட்டி பூலாம்பட்டி வந்துட்டான்.ஆறுமாசம் ஒருவருசம் ஆவுமிந்தியே,அப்பனையும் அம்மாளையுந் தின்னு தண்ணிக் குடிச்சிப்புட்டான். அம்மா செத்த எலவுக்கு பொண்டாட்டி மூக்குல. காதுல இருந்தது அடவுக்குப் போச்சி, அப்பஞ்செத்த காரியத்துக்கு அந்த மோதரமும் வாஸ்சும் போச்சி.
மின்ன மாதரயா நோம்பி நொடிக்கி ஆட்டமுடறாங்க? இப்பத்தாங் குண்டியாட்டம் பாத்துப் பழவிக்கிச்சே சனம், எடவெளியே இல்லாம அலங்காரமா வந்து குமிஞ்ச எடத்துல கூத்துங்கறதே அறுதியாயிக்கிச்சி, கூழோ. கலியோ. கூப்புனு அரிசிச்சோறோ கொல நனஞ்சாப் போதுமின்னு வவுத்துப்பாடே பெருசாப்போச்சி, இதல எங்க அடமானத்த மூக்கறது, ஆறு மாசத்துல வட்டியும் மொதலுங்குடுத்தவனுக்கு இன்னிக்கி. நாளைக்கின்னு சாக்குச் சொல்லியே வருசம் ஒண்ணத் தாட்டியாச்சி.


தலமேல இருக்கறச் சொமயா கொண்டாடா நாஞ்சித்த தூக்கியாரமின்னு வாங்கிக்கிறதுக்கு உருவாச்சமாச்சாரம், இந்தக் காலத்துல ஒருத்தம் பொழைக்கறதப் பாப்பானா? பெறத்தியாங்கயிட்டத்தப் பாப்பானா? நகுலூருச் சுப்பனும். சௌந்தரங் கோமாளியும் ஆன முட்டும் இவஞ்சொல்ற தவுமானத்தக் கேட்டுக்கிட்டாங்க, ஆனாக் கண்ணாலக் காரியமாச்சே ஒரு நவ நட்டு இல்லாம எப்படி? பாக்கற வரைக்கும் பாத்துட்டு சுப்பஞ் சுருக்குனு ஒருச்சொல்லு சொல்லும்புடி சொல்லுப் பொறுக்க மாண்டாம ஒடி பனங்காட்டு மொண்டிச்சிக்கிட்ட ஒத்தைக்கி டவுலு கந்து வட்டிக்கி காசவாங்கி மோதரத்தையும் வாஸ்சயும் மூட்னதெல்லாம் மிந்தாநேத்தே மூட்டிப்புட்டாள் ரெண்டுநாளா ஆடவேண்டிய ஆட்டம் மழைக்கி நிக்கிம்பிடி அவுங்களும் நேர்ப்படல, மக்யாநாத்து சலகண்டபுரம் மதுர காளியம்மன் கோயில்ல அலங்காரம் இருந்தது, நேர்ல கொண்டி குடுக்க மொடப்பட்டுக்கிட்டு சேரி அங்க வந்தா பொருள ஒப்படச்சிப்புடலா மின்னுச் சிலேட்டமா இருந்தான். வெனய தேடிக்கிட்டான்.
செட்டுக்குப் போயும் தரித்தினியம் தொலயில, நீட்டாத கைய நீட்டி வாங்காத பக்கம் மொள்ளய வாங்கி வெச்சிட்டமே. எடப்பட தடப்பட எங்கியாச்சும் கூப்ட்டப்பக்கம் போயி பத்தஞ்சி ரெண்டு உண்டுன்னாச் சம்பாரிச்சாத் தானே கடங்கட்ட முடியிமின்னு மத்த செட்டுக்கும் போயிக்கிட்டிருந்தாம் பையன்.


வடச்சட்டிக்கிப் பயந்து அடுப்புல வுழுந்தாப்பிடி ஆயிப்போச்சி அன்னிக்கி இவங் கூத்துக்குப் போன கத, நம்ப சங்கிரி அஞ்சிப்பனையாண்ட கொரங்கச்செட்டுதுதாஞ் சதுரு, ஆனா கூத்துவுட்ட கரவத்தானுங்க பொண்ணு வேசத்துக்கு இவந்தான் வேணுமின்னு தனிச்சம்பளத்துக்கு பேசி வண்டிப்போட்டுக் கூட்டிக்கிட்டுப்போனாங்க.


கொரங்கனோட கூத்தாடறதும் ஒண்ணு அந்த நறவல்ல காலு வெக்கறதும ஒண்ணு, ஆலாமரத்துலக் குந்திக்கிட்டு கொரங்கு எம்புளுலேச் செம்புளுலுன்னுத் தடவித் தடவிப் பாக்குமாமே அந்த மாதர ஒருச்சுக்குந் தெரியலைன்னாக் கூட என்யைவெட பெரிய புளுத்தி எவனுமிந்த பூமியிலியே இல்லம்பான், அவனோட ஒராளு வேசம்போட்டு ஆடுதுன்னா அவனுக்கு அடங்கித்தான் இருக்கணும், கடுகத்தன மீர்றதுக்கில்ல, அப்பிடி எங்கியாச்சுந் தப்பிடியா ஒருத்தங் கொண்டயம் போட்டுட்டான்னா இவன் விடியறதுக்குள்ள எதோவொரு வகயில அவன மொக்கப்பட்டம் பண்டிப்புடுவான், அரியானூரு பழனிசாமியிலிருந்து தானாதியூரு அர்ச்சுனன் முட்டும் அவஞ்சில்ரப்பித்திய செருப்பலடிக்காதவங்களே இல்ல, துரோபத துயிலு நாடகம், மடத்தூரு ஆறுமொகம் திரியோதனன், கொரங்கந் துச்சாதனன் சத்திப்பையம் பாஞ்சாலி. செட்டிப்பட்டி சின்னாளு அர்ச்சுனன். சித்தூரு பழனி தருமரு, திரியோதனந் தர்பாருக்குப் பொறன பாண்டவரு அஞ்சிபேரும் தர்பாரு ஆனாங்க, பகடயாட்டம் முடிஞ்சி. துச்சாதனன் துரோவதி சந்திப்புக்கட்டம்.


“மதித்த துரோபதையே நீதான் மானமுள்ளவளே யானால்
தித்தரும்நூற்றோர்அன்புவேணும்என்பவளேயானால்
கொதித்திடும்எந்தன்அண்ணன்கொலுவிற்குவரவேச்சொன்னார்
எதிர்த்துரை சொல்லாமல் யென்பின்னே வாராய¢“
“மட்டும் மருங்கும் மரியாதி இல்லாமல்
பொட்டெனவே எனையழைத்த
புத்தியில்லா மைத்துனரே
தோற்றமுடி உங்கள் அண்ணன்
சூழ்ந்திருக்கும் சபையில் என்னை
இட்டு வரச் சொன்னவிதம் எனக்கறியச் சொல்வாயே“
“வள்ளியே தருமபுத்திரன்
வலிவந்த சூதுமாடி முன்னிலும்
நாடுநகரம் முழுவதும் தோற்றான் பெண்ணே!
தன்னையும் தோற்றான் தம்பிமாரையும்
தோற்றான் உன்னயுந் தோற்று நின்று
ஒடுங்கினான் வந்து பாராய்“
“என்னையும் சொக்கட்டானில் வைத்து
இசையவே தோற்றார் என்றால்
என்மன்னவர் ஐந்துபேரும் வரவழைத்திடுவார்
காண் உன்னயும் யார்தான்
கண்டார் உன் தமையைனையும் யார்
தான்கண்டார்? பின்னமா பேசாதே
பேசாமல் நடந்திடுவாயே“
“நடக்கத்தான் வந்தேன் வந்தேன்
ஒரு நாழிகை தனிலே யுன்னை
ஒடுக்கத்தான் வந்தேன் வந்தேன்
வேந்தர்கள் சபையின் முன்னே
கெடுக்கத்தான் வந்தேன் வந்தேன்
கெர்வத்தை அடக்க வந்தேன்“
“துரோகியே இதுவென்ன சொல்லடா
என்னை தொடவேண்டாம் தூரநில்லடா
நெருப்பென்று தெரியாது நீசனே நீயாடாதே
கருத்தினால் கெட்டு வீணாய்க் கருகிப்போகாதே“
“தொட்டு இழுக்காமல் போவேனோ
போனால் துரியந்தம்பி ஆவேனோ
செத்தமாடும் பில்லுத் திங்குமா இனி
உஞ்சித்திர மினுக்கெல்லாம் செல்லுமா“


இந்த மாதர பாட்டுக்குப் பாட்டு விருத்தத்துக்கு விருத்தம் சத்திப்பையன் வுட்டுக் குடுக்காமப் போடும்படி, கொரங்கனுக்கு வேக்காடு ஒண்ணும் பொறுக்கமுடியல.
"போடுசா பொக்க "
"போடுசா பொக்க "ன்னு
சும்மாவே அல்லையில காரிக்காரித் துப்பிக்கிட்டிருந்தான்.
போடுசா பொக்கன்னா கூட ஆடற வேசக்காரன தொம்பரூட்டு பாசையில நாஸ்தி பண்றது, இவன் என்னாப் பண்டறான், ஏதுப்பண்டறான்னு கண்ணுறுத்துப் பாத்துக்கிட்டிருந்தாஞ் சத்திப்பையன். ஹூம் அவனுக்கா தெரியாது பல தண்ணி குடிச்சவனுக்கு. இருந்தாலும் தொழில தொழிலாச் செய்யனுமின்னு,,, பையங் குட்டு வுடல.


துயிலுரியறக் கட்டம் வந்தது, எப்ப அந்தக்கட்டம் வருதோ,,, தொரவதி வேசக்காரனும். துச்சாதன வேசக்காரனும் இன்னதுதாம் பண்றமின்னு ரக்கு தெரிஞ்சி வெளையாடனும். இல்ல மந்தையில மானங்கெட்டு நிக்கணும், இதுதாண்டா சமயமின்னு எடங்கண்டு ஏறி மிதிச்சாங் கொரங்கன், ஏமாந்த வாக்குல நின்னு,வசனம் பேசிக்கிட்டிந்த சத்திப்பையஞ் சீலயப் புடிச்சி வெடுக்குனு இழுத்தாம் பாத்துக்க...... அவம் போட்ருந்த படி முடிச்சறுந்து முக்காச்சீல கொரங்கங் கையோட வந்துட்டது. அதறப்பதற அலயக்கொலய இப்பிடிச்செஞ்சா ஆருக்குத்தான் வெறி திலும்பாது? கங்கேடு மதிகேடா நட்ட நடு டேசியில போயிநின்னு சத்திப்பையன்,
“அடே கொழுந்தா! ஏண்டாப்பாவம் இவ்ள கயிட்டப்படற? இப்ப என்னா உனக்கு எம்பண்டத்தப் பாக்கணும் அவ்வளத்தான. இந்துரா பாத்துக்கடா”ன்னு
பாவாடய தூக்கி காட்டிப்புட்டு உள்ற போனவந் திரும்பி வரல, பிதுமாரு கெட்டுப்போச்சி, ஆயிரம் ஆட்டம் ஆடியிருக்கிறான், ஒரு நாளயிலியும் இந்த அவுமானம். நேந்ததில்ல.
பாஞ்சாலி சவதங் கூறாம கதய முடிக்க முடியாது, கூத்துட்டவங்க வந்து கெஞ்சிக் கொறமாட சத்திப்பையஞ் சாராயம் இல்லாம வெளி வரமாண்டேன்னுப்புட்டான், அஞ்சிப்பனையில சாராயத்துக்கா பஞ்சம்? நிழுசங் கொண்டாந்து குடுத்தாங்க சிலுவருப்போவுணி வழிய. சரக்கு அடிச்சிக்கிட்டுப் போயி ஒண்ணா ரெண்டா பாடி சந்தடைச்சிப்புட்டு வந்து வுழுந்தவன் உச்சி வெயிலு பொச்சியில அடிச்சப்பொறன எந்திரிச்சிப் பாத்தா, ஏப்பா கையிலிந்த மோதரத்தையுங் காணம்.! Õவாஸ்சயுங் காணம்! அவ்வளத்தாம் பையம் ஒடம்புல உசுரு இல்ல. கூட்ல ஆவியில்ல, எதக்கண்டு செரிக்கட்றது இருக்கற தொந்தரவ?
ஒடமக்காரஞ் சும்மாயிருப்பானா? மின்னயே “வயித்துக்கு என்றாத் திங்கறன்னு கேட்டுப்புடல? ஊருக்கெணத்தாண்ட ஒக்காந்தி வேசம் அழிக்கறப்பவே சத்திப்பையம்மேல சாவுக்கவுச்சி அடிச்சது, மொள்ள சங்கிரி வந்து அங்கயிருந்து முருகம்பஸ்ல ஏறி பூலாம் பட்டி வந்துச் சேந்தான்.
இவந் தலயக் கண்டதும் பையனும் பிள்ளயும் 'ஓ'ன்னுக்கத்தி கொணாய்ச்சிக்கிட்டு ஒடியாந்ததுங்க, பொட்டியக்கீழ வெச்சிட்டு கையிக்கு ஒண்ணாத் தூக்கயில தாயாலிக்கி எங்கிருந்து அத்தன ஆவுசம் வந்ததோ தெரியல! மென்னு முழுங்கறவனாட்டம் ரெண்டுங்களயுஞ் சொட்டவுடாம கடி கடின்னு கடிச்சி முத்தங் குடுக்கறானேச் சண்டாளப் பாவி!.
கள்ளு முள்ளு தெரியாத நிதானமாயிருந்தாலும் அதுங்களுக்கு நொறுவ வாங்க மறக்க மாட்டான், காலோட பின்னிக்கிட்டு வாற பிள்ளைங்களுக்கு பாலோடச் சோறூத்தலையின்னாலுங் கூட அகங்கைக்கிப் பத்தனத வஞ்சனையில்லாம வாங்கிப் போட்டு திங்கடிப்பான், அன்னிக்கிப்பாவம் வெறுங்கையோடதான் வந்தான், அதுங்களும் பாவம். அதப்பத்தி கண்டுக்கல, அப்பனோட சிரிச்சி மவுந்ததுங்க, ஒருச்சித்தய குடுமியப்புடிச்சேறி வௌயாண்டுதுங்க, போன நாயம் வந்தநாயம் பேசிக்கிட்டு அதுங்க தூங்கறதுக்கே ராவு வெகு நேரந்தாண்டிப் போச்சி...
தூக்கத்துல வில்லிதான், இருந்தாலுங் கடங்காரு வந்து போட்ட ரவுசுல சத்திப் பொண்டாட்டி காத்தாலப் புடிச்சே சோறுத்தண்ணியில்லாம கெடந்தா, வெறும் வவுத்துல எப்பிடி தூக்கம் புடிக்கும்? காலொருபக்கம், கையொருப்பக்கமா மாருமேல கெடந்த பிள்ளைங்கள தூக்கி ஒரு ஒரமாபோட்டுட்டு பொண்டாட்டியிண்ட வந்து படுத்தான், கண்டதும் அவ இவங் கோளாற நெனச்சி அழுதா,,, அழுதா,,, ஒயாம அழுதா.. சொல்ற சமாதானமெல்லாஞ் சொன்னவன் ஒண்ணும் வேலைக்கி ஆவாம பையம் ரவுக்குனு பண்ணயத்துல முசுவா பூந்துட்டான், வேணும் வேணாங்க உப்ப மழ அந்நேரம் பிச்சிக்கிட்டு ஊத்துது, வேர்த்த ஒடம்பு காத்து வேணுமிங்க பிருசனும் பொண்டாட்டியுந் திண்ணையில குந்தி மிய்க்க. மிய்க்க பொழைக்கற நாயம் பேசனாங்க.காத்துச் சிலச்சிலுப்புக்கு கண்ண சொழட்டிக்கிட்டு வரும்பிடி அவ ஒருபக்கங் கட்டயச் சாய்க்க, இவனும் ஒருபக்கம் சாக்க விரிச்சுட்டுப் படுத்துக்கிட்டான், புருசம்பெருமயில பொம்பளைக்கி மசத் தூக்கம் மாயமா வந்துட்டது..


சத்திப்பையன் சுத்தியும் ஒருவட்டம் எசவிருக்குதான்னு நோட்டமுட்டுட்டு இடுப்புல கைய வெச்சிப்பாத்தாங் குருண மருந்துப்பொட்டலம் பத்ரமாயிருந்தது,,,,ச்சேரி மாடப் பெரையில ஒளிய வெச்சிருக்கற வெராந்திப்பாட்ல எடுக்கனுமே, குந்தனவாக்குல பூனையாட்டம் நவுந்து மொள்ள எந்திரிச்சி, ஒரு எட்டு தரையில வெச்சவன் மறு எட்டு வெச்சான் மவக்காரி மணிக்கட்டுமேல! எளங்கையிக்கும் அதுக்கும் எலும்பு ச்சடக்குனு முறிஞ்சது.
"ரே யெஜ்ஜா" ன்னு பிள்ள ஒரேக் கத்தா கத்த "அய்யோ மவளே"ன்னு,தன்னப்பால பையங்கையி படக்குனு ரைட்டப்போட்டது